Friday, August 21, 2009

மூடுவிழா..

இன்றுடன் கடை மூடப்படுகிறது.

இனி எப்போதாவது திறக்கப்படலாம், படாமலும் போகலாம்.

நன்றி..

Tuesday, August 18, 2009

தற்கொலைக் கடிதம்

நான் எங்கள் ஊர் ஹைஸ்கூலில் ஆறாவது சேர்ந்தபோது, செந்தில் அதே பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தான். நான் பத்தாவது படிக்கும்போது செந்திலும் பத்தாவது வந்து சேர்ந்திருந்தான். செந்திலின் சில கைவரிசைகளால் அவன் அந்த பள்ளியில் பிரபலம் அடைந்திருந்தான். அப்போது “notorious” என்ற வார்த்தை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது நினைவு கூர்ந்தால், அவன் notorious ஆகத்தான் இருந்திருக்கிறான் என்று தோன்றுகிறது. எனக்குக் கூட அவனை விவேக்குக்கு ஐஜியை தெரிந்ததைப் போலத்தான் தெரிந்திருந்தது.

பத்தாவதில் சில மாதங்களைக் கடந்திருந்தபோது, எனக்கும் செந்தில் கொஞ்சமாகப் பழக்கம் ஆனான். ஆனாலும் நானும் அவனும் வேறு வேறு செக்சன் என்பதால் என்னை விட “C” செக்சனில் படித்த என் நண்பன் சங்கர் அவனுக்கு குளோஸ் ஆக இருந்தான். இப்படியாகப் போய்க் கொண்டிருந்த ஒரு நாளில்தான் செந்தில் இறந்த செய்தி எங்களை வந்தடைந்தது.

செந்தில் வாழ்ந்தது எங்கள் ஊருக்குத் தெற்குப் புறமாக தொலைவில் இருக்கும் ஒரு குடியிருப்பில். வெகு சில குடும்பங்களே அந்த குடியிருப்பில் வாழ்ந்து வந்தன. எப்போதாவது கோட்டூருக்கு சைக்கிளில் போகும்போது “இதுதாண்டா செந்தில் வீடு”, என்று சங்கர் காட்டியதுண்டு.

கருப்பாக இருந்தாலும் தன்னை அழகனாக காட்டிக் கொள்வதில் செந்தில் ரொம்ப சிரத்தை எடுத்தான். எப்போதும் சலவை கலையாத உடை உடுத்துவான். புதிது புதிதாய் வாட்ச்சோ, செருப்போ மாற்றிக் கொண்டே இருப்பான். அவனது “ஹெர்குலிஸ்” சைக்கிளும் எப்போதும் துடைக்கப்பட்டு பல ஜிகினா வேலைகளோடு அழகாகவே இருக்கும். உள்ளூரிலும், வெளியூர்களிலும் யாராவது அழகான பெண்களை துரத்திக் கொண்டே இருக்கும். “என்ன பாஸ், சௌக்யமா?” என்றபடி ஹெர்குலிஸில் பறப்பான். நண்பர்களில்லாத பிற தெரிந்தவர்களை “Boss” என்று அழைத்தது எனக்குத் தெரிந்து அவன்தான் முதல்.

இதே போல ஒரு சாதாரண நாள் அது. எப்போதும் போலவே கடந்து கொண்டிருந்த நாளின் மாலை நேரம் திடீர் அதிர்ச்சி தந்தது. செந்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஊர் முழுதும் பரவியிருந்தது. நானும் இன்னும் சில நண்பர்களும் அதிர்ச்சியுடன் சங்கர் வீட்டுக்கு சென்றபோது, அவன் முகம் வெளிரி பயத்தால் உறைந்திருந்தான். “படுபாவி.. போகும்போதும் என்ன மாட்டிவிட்டுட்டு போயிட்டாண்டா”, என்றான்.

“ஏய்.. வாடா எல்லாரும் போயிட்டு வரலாண்டா.. இல்லண்ணா என்ன நடந்ததுன்னே தெரியாம கஷ்டமா இருக்குண்டா”, என்றான் சிவா.

“இல்லடா.. எனக்கு பயமா இருக்குடா.. நான் இப்ப வரமாட்டேன்”, என்றான் பிடிவாதமாய் சங்கர்.

சிறிது நேர ஆலோசனைக்குப் பின் சங்கரை விட்டு மீதமுள்ளவர்கள் செந்தில் வீட்டுக்கு போய் (வேவு பார்த்து) வருவது என்று முடிவானது. சொந்த சைக்கிள்களாகவும், வாடகை சைக்கிள்களாகவும் ஆறு பேர் செந்தில் வீட்டுக்குச் சென்றோம். கால்மணி நேர மிதிப்புக்குப் பின் செந்தில் வீட்டை அடைந்தபோது, செந்திலின் அண்ணன் சீரியஸான முகத்துடன் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து சிரிக்கலாமா என்று எண்ணி பின் சிரிக்காமலேயே நின்றேன். உள்ளே அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது.

“செந்தில் கிளாஸ்மேட்டாடா நீங்களாம்?”, என்றான் கொஞ்சம் மிரட்டும் குரலில்.

“ஆமா..”, என்று பம்மினோம்.

“பாத்தீங்களாடா அவன் பண்ண வேலைய..” என்றபடி உள்ளே சென்றான். ஊகித்தபடியே, செந்திலின் அப்பா வெளியே வந்தார். “யாரு சங்கர்?”, என்றார் எரிச்சலான குரலில். அவர் முகம் எப்படி இருக்கும் என்று பார்க்கவெல்லாம் எங்களுக்கு துணிச்சல் இல்லை. குற்றவாளிகள் போல் தலையை குனிந்து நின்றோம். “சொல்லுங்கடா..” என்று கத்தினார்.

எங்களில் கொஞ்சம் தைரியசாலியான சிவா முன்னே வந்து, “அவன் வரலை.. எங்க இருக்கான்னு தெரியலை”, என்றான்.

“ஓஹோ.. அப்டியெல்லாம் ஒளிய முடியாது.. அவங்கப்பாவுக்கு ஆள் உட்டிருக்கேன்”, என்றதும் எங்களுக்கு குலை நடுங்கியது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார். வருவோர். போவோர் எல்லாரும், “என்ன செந்தில் பிரண்ட்ஸா?” என்று சந்தேகமாகவும் கேலியாகவும் கேட்டார்கள். இதற்கு மேலும் நிற்க முடியாது என்று சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.

நன்றாக இருட்டி இருந்தது. நிலா வெளிச்சம் மட்டுமே துணை. ஏதேதோ பேசிக்கொண்டே சென்றோம். யார் யார் என்ன பேசினோம் என்று சரியாக ஞாபகமில்லை, ஆனால் அந்த உரையாடல் போனவிதம் ஞாபகம் இருக்கிறது.

“இவனுக்கு எப்டிடா முத்துலச்சுமி மாட்டிச்சு?”

“ஏன் அது என்னா பெரிய நதியாவா.. எல்லாம் அதுக்கு செந்தில் போதும்”

“இல்லடா பத்தாவது படிக்கறவனுக்கு.. பிளஸ்ட்டூ படிக்கிற பொண்ணு எப்டீடா”

“போடா இவன் பெயிலாகாம படிச்சிருந்தா இன்னேரம் காலேஜே முடிச்சிருப்பான்.. அதெல்லாம் அதுக்கு தெரிஞ்சிருக்கும்”

“ஆனாலும் சங்கருக்கு இது தேவையில்லாத வேலதாண்டா.. கிறுக்குப்பய”

“அட.. நம்மகிட்டயாவது சொல்லிருக்கலாம்.. இவருதான் மொத லட்டரையே குடுத்து செட் பண்ணிருக்காரு”

“எனக்கு அப்பவே கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.. ஆனா, சீரியஸா எதும் நடக்காதுன்னு நெனச்சேன்”

“சரி என்னதாண்டா ஆயிருக்கும்”

“தெரியலடா.. ஆனா முத்துலச்சுமிய கொஞ்ச நாளா நான் ஸ்கூலில பாக்கவே இல்லடா”

இப்படி பேசிக்கிட்டே போகும்போது தூரத்தில் ஒரு உருவம் சைக்கிளில் வருவது தெரிந்தது. எங்கள் ஊரில் லைட் உள்ள சைக்கிள் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவு. சங்கரின் அப்பா சைக்கிளில் லைட் இருக்கும். அவர்தான் என்று ஊகித்து விட்டோம். அவரும் எங்களை தூரத்திலிருந்தே பார்த்திருக்க வேண்டும். மிதிப்பதை நிறுத்தி விட்டு எங்களுக்காக காத்திருந்தார்.

“எங்கடா எம்பயல காணாம்?” என்றார்.

“தெரியலங்க சார்.. நாங்களும் அவன தேடினோம்”, என்றேன் நான். பொதுவாகவே நண்பர்களின் அம்மாக்களை “அம்மா” என்றும் அப்பாக்களை “சார்” என்றும் அழைப்பது வழக்கம். ஏதாவது விதி விலக்கில் “ஜம்பு அப்பா”, என்றோ “முருகேஸ் அம்மா” என்றோ அழைப்பதுண்டு.

“என்னடா பண்ணான் எம்பய..? எதுக்குடா இவன் பேர லட்டர்ல எழுதி வச்சான் அந்த பய?”, என்றார். நாங்கள் மௌனமாக இருந்தோம். “ஆமா.. எல்லாம் சேந்து சுத்துங்க, ஏதாவது பிரச்சினைனு கேட்டா ஒன்ணும் தெரியாத மாதிரி கம்முனு இருங்க... போங்கடா, போய் அவன எங்கயாவது தேடி கூட்டிட்டு வாங்க”, என்றபடி கிளம்பினார்.

பிரபாகர் ரூமில் ஒளிந்திருந்த சங்கரை கண்டு பிடித்தோம். போனதும் “என்னடா? என்ன நடந்திச்சி.. அவங்கப்பாவ பாத்தீங்களா? அந்த லட்டர பாத்தீங்களா? போலீசெல்லாம் வந்துருக்கா..?”, என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் கேட்டவனிடம் “அவங்கப்பாவ மட்டுமில்ல.. உங்கப்பாவையும் பாத்தோம், அவரு இப்ப செந்தில் வீட்லதான் இருக்காரு”, என்றதும் பேச்சு அடங்கியது.

“பேசாம வந்துருடா.. என்னதான் நடக்குதுன்னு பாத்திருவோம். அவன் உன்னப் பத்தி அந்த லட்டரில என்ன எழுதினான்னு கண்டு பிடிக்கணும்.. அதுக்கு நாம அங்க போய்த்தான் ஆகணும்”, என்று சம்மதிக்க வைத்தோம்.

மறுபடியும் செந்தில் வீட்டை அடைந்தபோது, சங்கரின் அப்பா அங்கே ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். நாங்கள் போனதுமே, செந்திலின் சொந்த பந்தங்கள் எங்களைச் சூழ்ந்தனர்.

“நீதான் சங்கரா?”, என்றார் ஒருவர்.

“ஆமாங்க..”

“சொல்லுப்பா.. என்னதான் நடந்திச்சு”

“வந்து முத்துலச்சுமின்னு கோட்டூர் பொண்ணு.. அத செந்தில் லவ்..”, குரல் கம்மியது.

“யாரு அந்த பொண்ணு? கோட்டுரா?”, கூட்டத்தில் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“என்னா நடந்திச்சின்னு எனக்கும் தெரியாது.. ஆனா, அந்த பொண்ணு ஸ்கூல் வரதை நிறுத்திடுச்சி”, என்றான் சங்கர்.

சட்டென்று கூட்டத்தில் ஒருவர், “ஓ.. நம்ம சாமித்துர பொன்ணு.. முத்து.. அதுக்குதான் போன வாரமே கண்ணாளம் முடிஞ்சிருச்சே..”, எல்லோரும் அவரையே பார்த்தோம், “அது கட்டுணது ஏதோ பெரிய எடம் போலருக்கு.. அந்த பொண்ணு இப்ப மெட்ராஸில..”, அவர் தொடர்ந்தார்.

ஏதோ சிக்கலான ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட்டது போல் இருந்தது. நாங்களெல்லாம் கொஞ்சமாக பெருமூச்சு விட்டுக் கொண்டோம். செந்திலின் அப்பா சங்கர் அப்பாவைப் பார்த்தார், “ரொம்ப தேங்க்ஸ் சார் வந்ததுக்கு.. பையன் பேரு லட்டர்ல இருந்திச்சு, அதான் இவனுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமான்னுதான் வரச் சொன்னேன்.. நீங்க போங்க சார்”. பதிலுக்கு சங்கரின் அப்பா ஏதோ ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் சைக்கிளை நோக்கிச் சென்றோம்.

வரும் வழி முழுவதும் சங்கருக்கு அர்ச்சனை நடந்தபடியே வந்தது.

“அந்த லட்டரில சங்கரப் பத்தி அப்படி என்னாதான் எழுதியிருந்திச்சு?”, சங்கரின் அப்பாவிடம் கேட்க ஆசையாத்தான் இருந்தது. ஆனால், அது சரியான நேரமில்லை என்று கேட்காமலேயே விட்டு விட்டேன்.

Wednesday, August 12, 2009

தமிழ்நாட்டின் 108 அவசர சேவை (EMRI) குறித்து

தமிழ்நாட்டின் 108 சேவை நன்றாகவே வேலை செய்யுதுன்னு சான்று கொடுக்கறாரு ஒருத்தரு. கேட்கவே சந்தோஷமா இருக்கு. நீங்களும் ஏதாவது விபத்தைப் பார்க்க நேர்ந்தால் இது உதவலாம் என இங்கே பதிகிறேன்.
எனக்கு மின்னஞ்சலில் வந்தது இது. இதனை யார் அனுப்பினாங்கன்னு தெரியலை.

மெயில் ஆங்கிலத்தில் வந்தது. அதை மொழிபெயர்க்க நேரமில்லாததால் அப்படியே பதிகிறேன். இது எந்த ரிமோட் கிராமத்திலும் வேலை செய்யுதுன்னு சொல்றாரு..யோவ், எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்யான்னு நீங்க சொல்றது கேக்குது.. அதனால படிச்சிட்டு உங்களுக்கு தெரிஞ்ச மேலதிக தகவலை பின்னூட்டிட்டு போங்க.. நன்றி

-----------------------------------------------

Dear All

I am sharing my personal experience with “108” (EMRI) on their Quick response. When I travel from Pondicherry to Coimbatore last Sunday (02-08-09) night by Bus, the bus met an accident with lorry in National Highway nearby “Atthur” Landmark: “Paaventhar college of Arts and Science”. Two of my co-passenger got injured. One is lady and second is her baby of 15months old. The lady had an injury in her hand and the baby was motionless. The First-Aid kit is also missing in the bus.

The accident happened at mid-night 00:57am. On seeing the condition of the baby and mother, I immediately called 108 at 00:59am. Explained the state of injured persons and location of the place, Village, District & Taluk (assisted by a local person). It took around 3minutes. At 01:03am (within a minute) I got a call from 108 with a conference to the district level center explained the exact location and condition of the persons injured. It took around 3minutes.

At 01:08am again I got a call from the Ambulance saying that they are on the way to accident spot. To be surprise, the Ambulance reached the spot at 01:17am and started the treatment. The baby was brought to the active state (may be due to timely attempt by 108-EMRI) and medicines given for injured lady. At the end of their treatment both of them came to normal. The EMRI 108 Ambulance reached the spot within 15minutes from the receipt of information to them.

Here I would like express one thing that except me, none of the co-passengers were not aware of 108. As I am aware of 108 through training given for EMERGENCY EVACUATION DRILL conducted in June ’09, I could help the co-passengers. Kindly share this experience, so that the people can make use of wonderful service provided by EMRI – “108” in TamilNadu.

---------------------------------------

Tuesday, August 4, 2009

சிலோனா நீ? - முடிவு.

இதன் முதல் பாகத்தை வாசித்து விடுங்கள்

எல்லா மாணவர்களும் எழுந்து கால்சட்டையின் பின்பக்கம் இருந்த மண்ணை தட்டி விட்டுக் கொண்டனர். சிலர் என்னை பரிதாபமாக பார்த்தனர்.. சிலர் “மாட்டிகிட்டாண்டா” என்றும், சிலர் பார்க்கவே தைரியம் இல்லாத மாதிரியும் கலைந்து சென்றனர். நான் மட்டும் இச்சி மரத்தடியில் நின்று கொண்டிருந்தேன்.

அந்த பள்ளிக்கூடத்தில் மூன்று பெரிய இச்சி மரங்கள் இருந்தன. ஒன்று பத்தாம் வகுப்புக்கூடங்கள் இருக்கும் இடத்திலும் ஒன்று கேம்ஸ் (விளையாட்டு) ரூமுக்கு பின்னாலும், ஒன்று பாஸ்கட் பால் களத்துக்குப் பக்கத்திலும். நான் நின்று கொண்டிருந்தது அந்த மூன்றாவது மரம். அங்கிருந்து ஒரு பத்து மீட்டர் நடந்தால் கேர்ள்ஸ் பிளேகிரௌண்ட் வந்து விடும். அந்த பள்ளியில் ஆண்களுக்காக பெரிய கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்கள் இருந்தன. ஆனால், சாதரண நாட்களில் மாணவிகளுக்கு அங்கு வர அனுமதியில்லை. அவர்களுக்கென்றே இருந்த குட்டி மைதானத்தில் கோக்கோவோ, ரிங் பாலோ விளையாட மட்டுமே அனுமதி.

இரண்டு மைதானங்களுக்கும் இடையில் சிறு சுவர் வேறு உண்டு. ஆக, மொத்த பள்ளியின் தரைப்பகுதியில் ஒரு 10% தான் பெண்களுக்கு. ஆனால், விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது மட்டும் பெண்கள் சுவர் தாண்டி வருவதுண்டு.

நான் ஜேசுராமையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் அந்த வழியாக சென்ற இன்னொரு வாத்தியாரிடம் ஏதோ கதைத்துக் கொண்டு இருந்தார். அப்படியே தப்பி ஓடி விடலாமா என்று ஒரு எண்ணம் வந்தது. “சேச்சே.. கூடாது”, என்று நின்றேன்.

“இங்க வா”, என்றார் ஜேசுராம். அருகில் சென்றேன். அமைதியாக கைகட்டி நின்றேன். என் வாயை நினைத்து நானே நொந்து கொண்டேன்.

“தாமஸ பத்தி என்னா சொன்ன?”, என்றார் கொஞ்சம் கடுப்போடு.

“வந்து.. ஒன்ணும் இல்ல சார்”, என்றேன் மழுப்பலாக. எப்படியும் இந்த பதில் இந்த பிரச்சினையை இன்னும் சில நிமிடங்கள் நீட்டிக்க மட்டுமே உதவும் என்று நன்றாக தெரிந்தது.

“தம் அடிச்சிட்டிருந்தானா?”

“சார்”

“தம் அடிச்சிட்டு போற வாற பொன்ணுங்கள் கிண்டல் பண்ணிட்டிருந்தானா?”

அவர் சொன்னது எனக்கு அரை குறையாக புரிந்தது. “சா..ர் அப்படில்லாம் நான்.. சொல்லவே இல்ல..”, அழுது விடுவேன் போல் இருந்தது குரல்.

“சரி.. நீ உள்ளூர்தானா?”, என் அழுகையை மாற்றும் முயற்சியில் இறங்கினார் வாத்தியார்.

“ம்..” என்றேன் முனகலாக.

“உங்கப்பா என்னா பண்றார்?”

“அப்பா சிலோன்ல இருக்காரு”

“சிலோனா நீயு?”, எனக்கு இது ஏற்கெனவே கேட்டது போல் இருந்தது (Deja Vu, அதே கிண்டல்). “சரி.. ஒன்ன அப்பறமா கவனிச்சிக்கிறேன்.. கிளாசுக்கு போ” என்றார். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடினேன்.
-----------------------------------

அதற்கப்புறம் இரண்டு நாட்கள் அதை மறந்தே போனேன். பள்ளிக்கு போகும், வரும் வழியில் குட்டி கனேஷ் கடையில் தாமஸ் தென்படடுகிறாரா என்று பார்த்தேன். ம்கூம்.. அவர் இருக்கவில்லை. எல்லாம் நலம் அன்று சரவணன் அவசர அவசரமாக ஓடி வரும் வரை.

சின்ன ரப்பர் பந்தில் கால்பந்து விளையாண்டு கொண்டிருந்தோம். லஞ்ச் நேரத்தில் எங்கள் பொழுதுபோக்கு அதுதான். வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்த என்னை பிடித்து நிறுத்தினான். “டேய்.. ஸ்கூல் வாசலில தாமஸ் நின்னுக்கிட்டிருக்காரு”, என்றான். நான் எதுவும் புரியாமல் முழித்தேன்.

“உன்ன கேட்டாரு.. கூட்டிட்டு வரச் சொன்னாரு”, என்றதும் என் முகம் சிவந்தது. வியர்வை இன்னும் கூடியது. காதோரம் வெப்பம் பாய்ந்தது. “போடா.. நான் வரலை என்றபடி” வகுப்பறைக்கு ஓடினேன். அன்று முழுதும் வகுப்பில் மனமே செலுத்த முடியவில்லை. தாமஸின் ஸ்மாஷ் செய்யும் பெரிய கைகள் மட்டுமே ஞாபகம் வந்தன.

அன்று வீட்டுக்கு போகும்போது சாமர்த்தியமாக குட்டி கனேஷ் கடையை தவிர்த்து, மாற்று வழியில் வீட்டுக்குப் போனேன். என் கூடவே தினமும் வீட்டுக்கு போகும் சம்பத், “என்னடா என்கூட வரலையா?” என்றபோது, “இல்ல.. சரவணன் வீட்டுக்கு கொஞ்சம் போகணும்டா” என்று பொய் சொன்னேன். போகும் வழியில் உயரமாக யாரைப் பார்த்தாலும் தாமஸ் போலவே இருந்தது. பயந்து பயந்து மெதுவாக வீடு போய் சேரும்போது சம்பத் அவன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தான். “என்னடா, தாமஸண்ணே உன்ன தேடுறாரு.. கனேஷ் கடைகிட்ட இருந்தாரு.. ஒன்ன கேட்டாரு” என்றபோது, எனக்கு பூமி நழுவியது.

அன்று வீட்டில் அம்மா, அக்கா, அண்ணன் என எல்லோரும் “ஏண்டா ஒருமாதிரியா இருக்க?” என்று கேட்டபோது “ஒண்ணுமில்ல” என்று எரிச்சல்பட்டு சமாளித்தேன். அந்த இரவு நீண்டதாக இருந்தது. வந்த கொஞ்ச தூக்கத்திலும் தாமஸ் என் மண்டையை ஸ்மாஷ் செய்ய அது என் கையில் பட்டு என் கை சுக்கு நூறாகியது.

மறுநாள் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் மாற்றுப் பாதைகளையே தேர்ந்தெடுத்தேன். வழக்கத்தை விட சீக்கிரமாகவே பள்ளிக்கு சென்று, வெகு தாமதமாக பள்ளியிலிருந்து திருடன் போல பதுங்கி வீடு சென்றேன். பள்ளியில் வெகு சில நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் இது பற்று பேசவே இல்லை. ஆனால் மனதுக்குள் குமைந்தேன். மற்றொருபுரம் தாமஸ் குறித்த செய்திகளை யாராவது கொண்டு வந்தவண்ணம் இருந்தனர்.

இந்த ரிஸ்க் எடுப்பது கஷ்டமாக இருந்தது. அதனால் அடுத்த நாள் காலை அறிவித்தேன், “இன்னைக்கு நான் லீவு எடுக்கணும்”

“ஏண்டா?”, என்ற அம்மா என் தூக்கமில்லாமல் சிவந்த கண்களைப் பார்த்து, “என்னடா சொகமில்லையா? சரி போய் தூங்கு” என்றார். ஆனாலும் என் அண்ணன், அக்கா எல்லாரும் ஏதோ சரியில்லை என்ற தொனியிலேயே என்னைப் பார்த்தனர்.

அன்று தற்காலிகமாக தாமஸிடமிருந்து தப்பினாலும் எவ்வளவு நாள்தான் இப்படி போக்க முடியும் என்ற கவலையில் உண்மையிலேயே காய்ச்சல் வந்தது. அன்று மாலை பிரபாகர் வீட்டில் ஹோம்வர்க் என்ன என்று கேட்கப் போய் அப்படியே விளையாடிக் கொண்டிருந்தேன். பிரபாகர் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது.

“ஹரி இருக்கானா?” என் அண்ணனின் குரல்.

“என்ன?”, என்று எட்டிப் பார்த்தேன்.

“வா!” என்றான் மொட்டையாக

“எங்க.. வீட்டுக்கா?”

“இல்ல.. தாமஸ் உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாரு.. இங்க சாவடியில இருக்காரு”

“இல்ல,, நான் வரல..” அழுவது போல சொன்னேன்.

“எல்லாம் எனக்கு தெரியும்.. எத்தன நாள்தான் இப்படி ஒளிஞ்சி திரியுவ..? வா, நானும் கூட வரேன்.”

கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனாலும் எனக்கு தெரிந்த எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டேன். மெது மெதுவாக நடந்தேன். தாமஸின் ஸ்மாஷ் ஞாபகம் வந்து தொலைத்தது.

தூரத்திலிருந்தே தாமஸ் அவரின் சிஷ்யக்கைகள் கூட சாவடியில் இருப்பது தெரிந்தது. வழக்கம்போல் ஒரு சாரம் (லுங்கி) கட்டி, முழுக்கை சட்டை போட்டிருந்தார். முழுக்கையை மடக்கப்பட்டு அரைக்கையாக இருந்தது. சட்டையின் முதல் இரு பட்டன்கள் இருப்பதே வேஸ்ட் என நெஞ்சின் உரம் காட்டிக் கொண்டிருந்தார். ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் எங்களைப் பார்த்ததும் அமைதியானார்கள்.

“வாடா, பொடிப்பயலே”, என்றார் குரலை கடுமையாக வைத்துக் கொண்டு. நான் கொஞ்சம் தூரத்திலேயே நின்று கொண்டேன். “பக்கத்தில வா” என்றார். நடுநடுங்கி பக்கத்தில் சென்றேன். என் அண்ணன் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தான்.

“எங்கப்பாகிட்ட என்னடா சொன்ன?”, என்றதும் அதுவரை என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்த சிஷ்யக்கைகள் சட்டென்று நிமிர்ந்தன.

“தெரியாம சொல்லிட்டேண்ணே”, என்றேன் முனகலாக. என் காதைப் பிடித்துக் கொண்டார் தாமஸ்.

“தம் அடிக்கிறேன், பொன்ணுங்கள கிண்டல் பண்றேன்னு எங்கப்பாகிட்ட வத்தி வக்கிறாண்டா இந்த பொடிப்பய..” என்றார். சிஷ்யக்கைகள் சுவாரசியமாகின. பொழுது போக ஒரு சின்னப்பயல் கிடைத்தால் போதுமே. நான் சொல்லும் எதுவும் இங்கு எடுபடாது என பேசாமல் இருந்தேன்.

“அதுமட்டுமில்ல.. எனக்கே ரெண்டு நாளா டிமிக்கி குடுக்கறாண்டா.. எவ்ளோ திமிரு இவனுக்கு... என்னடா பேசாம இருக்க?”, என இடது கையை ஓங்கினார். நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். ஒரு நொடி, இரண்டு நொடி.. ம்கூம் எதுவும் நடக்கவில்லை. கண்ணைத் திறந்ததும் எல்லாரும் “கொல்” என்று ஒரு சேர சிரித்தனர்.

“பொடிப்பயலா இருக்கன்னு பாக்கிறேன். இனிமே இதுமாதிரி எதுவும் வரக்கூடாது. சரியா”, நான் மௌனமாக இருந்தேன். பயத்தில் பேச்சே வரவில்லை, “சொல்லுடா..” என்று கத்தினார்.

“சரிண்ணே” என்றேன். கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது.

“ஓடிப்போ” என்றபடி காதை விட்டார்.

இவ்வளவுதானா?.. இந்த அஞ்சு நிமிஷம்தானா? இதற்காகத்தானா மூன்று நாட்கள் குமைந்தேன்? ஓடி ஒளிந்தேன்?

அதற்கப்புறம் எப்போது தாமஸைப் பார்த்தாலும், “வணக்கண்ணே” என்று சலாம் வைத்தேன். காலப்போக்கில் தாமஸ் நல்ல நண்பராகிப் போனார். ஆனால், ஜேசுராமுக்கும் எனக்கும் பனிப்போர் தொடர்ந்தது.

அப்போது புரியாத ஒரு விஷயம் இப்போது நன்றாகப் புரிகிறது. தாமஸ் சிகரெட் பிடிப்பதும், பெண்களை கிண்டல் செய்வது ஊர் நடுவே இருக்கும் ஒரு கடையில் அமர்ந்து கொண்டு. அது ஊருக்கே தெரியும். ஜேசுராமுக்கு தெரியாமல் இருக்குமா? அப்படியிருந்தும் என்னை பகடைக்காயாய் வைத்து ஜேசுராம் அவர் மகனை திருத்தவோ அல்லது அவமானப்படுத்தவோ முயன்றிருக்கிறார்.

“என்னடா குட்டி கனேஷ் கடையில் நின்னுக்கிட்டு தம் அடிக்கிறியாம்.. போற வார பொண்ணுங்கள கிண்டல் பண்ணுறியாம்.. ஆறாவது படிக்கிற ஒரு பொடிப்பய என்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றான்..”, என்று ஒரு அப்பா தன் இளந்தாரி மகனிடம் சொன்னால் என்ன நடக்கும்?

Monday, August 3, 2009

சிலோனா நீ?

குட்டி கனேஷ் கடைக்கு போகும்போதே அவரை கவனித்தேன். உயரமாக, சிவப்பாக (வெள்ளையாக?) அடர்ந்த மீசை வைத்து அந்த கால சினிமா ஹீரோ போல இருந்தார். (இந்த காலத்தில் அப்படி ஆளுங்களெல்லாம் தனுஷ்கிட்டயோ, ரித்தீஷ்கிட்டயோ அடி வாங்கும் வில்லன் வேஷம்தான் கிடைக்கும்). சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் வரும் எல்லா கேரக்டர்களும் வைத்திருக்கும் "விக்" போல முன் தலைமுடி சுருண்டு நெற்றியில் விழுந்தது. ஆஜானுபாகு என்று சொல்லலாம் அவரை.

"கா லிட்டர் தேங்கா என்னை, ரெண்டு தேசிக்காய்", என்றவாறு பாட்டிலை நீட்டினேன். குட்டி கனெஷ் புரிந்து கொண்டு தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்.

"சிலோனா நீயு?", கேள்வி வந்த திசையில் திரும்பினேன். கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. அவர்தான், அந்த ஆஜானுபாகுதான்.

"ஓ" என்றபடி திரும்பிக் கொண்டேன். ஒரு நொடிக்கு மேல் அவரை பார்க்க பயமாய் இருந்தது.

"என்னா ஓ.. ஆமான்னு சொல்லுடா", பேசும்போது வாயில் புகை வழிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அந்த "சொல்லுடா" வில் கணிவு தெரிந்ததால் கொஞ்சம் பயம் விலகியது. ஒரு சிரிப்புடன் நான் நிறுத்த முற்பட்டேன். ஆனால், அவர் விடவில்லை, "எந்த கிளாஸ் படிக்கிற?",

"ஆறாவது"

"ஹைஸ்கூலா.. ம்ம்.. எங்க அப்பாவ பாத்திருக்கியா?"

"யாரு?", எனக்கு அறிந்து கொள்ளும் சுவாரசியம் இல்லை. ஆனாலும் அவர் தொடர்ந்தார், "பீட்டி வாத்தியார்.. ஜேசுராம்.. ரொம்ப கண்டிப்பா இருப்பாரு", என்றார் ஒரு குறும்பு சிரிப்புடன்.

"சரிண்ணே நா வரேன்", எண்ணெய் பாட்டிலையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினேன்.

கொஞ்சம் தூரம் போனதும் தூரத்தில் இருந்து சத்தம் வந்தது, "ஏய், உம்பேரு என்னா?"

நின்றி திரும்பி சொன்னேன், "ஹரி", என் பேரை யாராவது கேட்டால்தான், அவர் பேரை கேட்கும் ஞாபகம் வரும் எனக்கு, "உங்கட பேர்?"

"தாமஸ்"
-----------------------------------------

நான் ஹைஸ்கூல் சேர்ந்து சில நாட்களே ஆகியிருந்தன. புத்தனாம்பட்டியில் இருப்பதே இரண்டு பள்ளிக்கூடங்கள்தான். ஒன்று எலிமென்டரி பள்ளி, ஒண்ணாவதிலிருந்து அஞ்சாவது வரை வகுப்புகள் உண்டு. இன்னொன்றில் ஆறாவதில் இருந்து +2 வரை உண்டு. சாதாரணமாக அதை மேல்நிலைப் பள்ளி (ஹையர் செக்கண்டரி) என்றுதான் சொல்லணும்,, ஆனாலும் அது ஹைஸ்கூல்தான் அந்த கிராமத்துக்கு.

அன்றுதான் எங்களுக்கு முதல் விளையாட்டு வகுப்பு. எல்லா மாணவர்களும் வகுப்பறையிலிருந்து வரிசையாக மைதானத்தின் மூலையில் இருந்த "இச்சி" மரத்தடிக்கு வருமாறு பணிக்கப்பட்டனர். போனோம், மண்ணில் உட்கார்ந்தோம்.

"பாய்ஸ்.. எல்லாம் நேரா நிமுந்து உக்காரணும்..இல்லண்ணா எனக்கு புடிக்காது", பின்னாலிருந்து கரகரப்பான, கண்டிப்பான ஒரு குரலுடன் என்ட்ரி ஆனார் பீட்டி வாத்தியார். வெள்ளை ஷர்ட்டும், கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தார். வழக்கமாக அந்த ஸ்கூலில் பெரும்பாலான ஆசிரியர்கள் வேட்டி அணியும் வழக்கம் இருந்தது. குழாய் அணியும் ஒரு சிலரும் சட்டையை "டக் இன்" செய்வதில்லை. ஆனால், இந்த வாத்தியாரின் சட்டை அழகாக பேன்ட்டுக்குள் சொருகப்பட்டிருந்தது. சொருகப்பட்ட இடத்தில் தொந்தி வழிந்து தொங்கியது. பாதி நரைத்த முடி, மீசையும் அது போலவே. பார்க்க ஒரு போலீஸ் அடிகாரி போல இருந்தார்.

"அடுத்த பீட்டி பீரியட்ல எல்லாரும் விளையாடலாம். நல்ல புள்ளையா நடந்துகிட்டா பந்தெல்லாம் தருவேன்.. இப்ப ஒவ்வொருத்தனா பேரையும், எந்த ஊரிலருந்து வர்ரேணும் சொல்லு.."

ஆரம்பித்தது படலம்

"எம்பேரு கலையரசன் சார், நான் ஓமாந்தூர்லருந்து வரேன் சார்", அவன் சார் போட்டது ஜேசுராம் வாத்தியாருக்கு பிடித்திருக்கும் போலும். கொஞ்சமாக புன்னகைத்தார்.

"குகனேந்திரன்.. சாத்தனூர்"

"அன்பழகன்.. நேரு ஹாஸ்டல்"

"ப்ரகாஷ்.. உள்ளூர்தான் சார்"

என்று தொடர்ந்தது.

பின்னர் தொடங்கியது லெக்சர்.. "A sound mind in a sound body" இதுக்கு மீனிங் தெரியுமா?".. எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எனக்கு கொஞ்சமா புரிந்த மாதிரி இருந்தது. ஆனாலும் தெரியும்னு சொல்ல பயம்.

"உடம்பை நல்லா வச்சுக்கணும்னா, நல்லா விளையாடணும்.. உடம்பு நல்லா இருந்தாதான் மனசு நல்லா இருக்கும். மனசு நல்லா இருந்தாதான் நல்லா படிக்க முடியும்..", ஒரு நிமிடம் எல்லாரையும் பெருமிதமான பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தார், "இப்ப புரிஞ்சுதா.. பீட்டி பீரியட் எவ்ளோ முக்கியம்ணு?"

எல்லாரும் மண்டையை ஆட்டினோம்

"சரி, நல்லா விளையாட என்னா செய்யணும்..ஏய் நீ எந்திரி", கடைசி வரிசையில் இருந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த சரவணனை பார்த்துக் கேட்டார்

எழுந்து பேசாமல் நின்றான். மனதில் ஜேசுராமை திட்டுவது போல் தெரிந்தது.

"ம்.. தெரியாதா.. சரி உக்காரு.. நல்லா திங்கணும்.. நல்லா தின்னாத்தான் நல்லா.." என்றவாறு எங்களை பார்த்து தலை மேல் நோக்கி அசைத்தார்.

"நல்லா வெளையாடலாம்", கோரஸாக சொன்னோம்.

"நீ எழுந்திரு..", ரெட்டை ஜடை போட்டிருந்த ராஜ்குமார் எழுந்து நின்றான், “ஒனக்கு புடிச்ச வெளயாட்டு எதுடா?”

“குட்பால் சார்”, அவன் சொன்ன மறுநொடி நான் சிரித்து விட்டேன். சட்டென்று ஜேசுராம் என் பக்கம் திரும்பினார், “என்னடா சிரிப்பு?”

“வந்து ஃபுட்பால்..”

“ஓ.. ஒனக்கு எல்லாம் தெரியுமோ.. ஒனக்கு புடிச்ச வெளயாட்டு எதுடா?” ஜேசுராமுக்கு நான் சிரித்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவதை அறிமுகப்படுத்தியவர்களில் நானும் ஒருவன் என்பதால் உற்சாகமாக சொன்னேன், “கிரிக்கெட் சார்”.

முகத்தை சுளித்தார் வாத்தியார்..”ஆமா, அதெல்லாம் ஒரு விளையாட்டு”, என்ற நக்கலுடன் தொடர்ந்தார், “நல்லா விளையாண்டா.. டிஸ்ட்ரிக்ட் லெவல், ஸ்டேட் லெவல்ன்னு போகலாம்.. என் பையன தெரியுமா? சும்மா ஆறடி இருப்பான், ஸ்டேட் லெவல் வாலிபால் போயிருக்கான்.. ஒரு ஸ்மாஷ் அடிச்சா, பந்த தொடறவன் கை காலியாய்டும்..”, நிறுத்தி எங்களையெல்லாம் ஒருமுறை பார்த்தார். யாருக்குமே ஸ்மாஷ் என்றால் என்னவென்று கூட தெரியாது. வாத்தியார் முகத்தில் பெருமிதம் தாண்டவமயாடியது. “யாராவது எம்பையன பாத்திருக்கீங்களாடா?” என்றார்.

அனிச்சையாய் என் கை மேலே போனது, “நான் பாத்துருக்கேன் சார்”

“எங்கடா?”, முகத்தில் பெருமிதம் இன்னும் கூடியது. தன் வகுப்பு மாணவர்களுக்கு தெரியும் அளவு தன் மகன் பிரபலாமக இருப்பான் என்று அவர் நினைத்திருக்கவில்லை போலும், “எங்க பாத்திருக்க?”

“குட்டி கனேஷ் கடையில் சார்.. அங்க அவரு சிகரெட் குடிச்..”, சட்டென்று சுதாரித்துக் கொண்டேன். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன். தலையை குனிந்து கொண்டேன்.

யாரிடமிருந்தும் சத்தமே இல்லை. தூரத்தில் ஆசிரியர் இல்லாத வகுப்புகளிலிருந்து வரும் இரைச்சல் சத்தம் தெளிவாக கேட்டது. தலை நிமிர்ந்தபோது மற்ற மாணவர்கள் எல்லாரும் என்னையே பார்ப்பது தெரிந்தது. ஜேசுராமின் முகம் சுருங்கியிருந்தது. ஒருவிதமான இறுக்கமான் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டோமே எனத் தோன்றியது. நல்லவேளை அமைதியை கலைக்கும் விதமாக “டிங்.. டிங்.. டிங்” என மணி ஒலித்தது. ஒருவழியாக முதல் பீட்டி பீரியட் முடிந்தது. எல்லாரும் எழுந்து கலைய முற்படும்போது வாத்தியாரின் குரல் ஒலித்தது.

“ஏய், நீ மட்டும் நில்லு... மத்த எல்லாரும் கிளாசுக்கு போலாம்.”

-தொடரும் (ஆனால் அடுத்த பாகத்தில் முடியும்)

Thursday, July 16, 2009

ஓடும் அன்னை, துரத்தும் தந்தை, அய்யோ பாவம் குழந்தை

சினிமா கதை தோற்கும் அளவுக்கு இருக்கு இந்த நிஜக்கதை. தன் குழந்தையை அப்பா தீவிரமா தேடறாரு. ஆனா, அம்மா அந்த குழந்தையோட ஒரு "Fugitive" ஸ்டைலில ஓடறாங்க. இடம் மாத்தி இடம், நகரம் மாத்தி நகரம். சென்னை, டில்லி, உ.பி, கர்நாடகான்னு எல்லா போலீசும் தேடியும் கிடைக்கலையாம். அடேங்கப்பா.. என்னா ப்ளானிங். ப்ளானிங்கா இல்ல போலீசோட தெறமை இவ்ளோதானா?

இத்தனைக்கும் அந்தம்மா எங்க எப்போ இருந்தாங்க.. எப்பல்லாம் வங்கியில பணம் எடுத்தாங்க, எந்த ஸ்கூலில மகனை (கொஞ்ச நாள்) படிக்க வைச்சாங்க அப்படீங்கற விவரமெல்லாம் கிடைச்சிருக்கு. ஆனா பிடிக்க முடியலை. அப்பாவோ, பையனுக்காக பாட்டெல்லாம் பாடி அதை வெப் தளத்தில வேற போட்டு வச்சிருக்காரு.. டாக்குமென்டரி எல்லாம் கூட.. என்னதான் நடக்குது?

ஜெயஸ்ரீ, ரவி சந்ரன் ரெண்டு பேர்க்கும் அமெரிக்காவில பிறந்த குழந்தைதான் ஆதித்யா. ஆனா, அவன் பிறந்த கொஞ்ச நாளிலயே திருமணத்துக்குள்ள பிளவு. அமெரிக்கா கோர்ட்டுக்கு போறாங்க. அங்க ஒரு டீடெய்லு கஸ்டடி ஆர்டர் போடறாங்க. என்னா டீடெய்லு.. அப்பப்பா.. பையன் எப்பெப்ப யார் கூட இருக்கணும், எப்போ அவனை வெக்கேஷன் கூட்டிட்டு போகலம், ரெண்டு பேரும் ஒரே நாட்களில வெக்கேஷன் கூட்டிட்டு போக ஆசைப்பட்டா, Odd (ஒற்றை எண்) ஆண்டில அம்மாவும், Even (இரட்டை எண்) ஆண்டில அப்பாவும் தேர்வு செய்ற தினங்கள்தான் செல்லுபடியாகும்.

லேபர் டே அப்பாகூட, ஹேலோவின் அம்மா கூட, வெட்டெரன்ஸ் டே அப்பாகூட, பொங்கல் அம்மாகூட இப்படீனு பல பக்கங்கள் போகுது. ச்சே.. பேசாம அந்த குழந்தைக்காவது கூடி வாழலாம். என்ன ஒரு டார்ச்சர்..

அதுல அம்மா பையனை வருஷத்தில மூணு வாரம் இந்தியா கூட்டிப்போகலாம்னு ஒரு ஆர்டர் சொல்லுது. அங்கதான் ஆரம்பிக்குது ஆப்பு அந்த குழந்தைக்கு. 2005 ல இந்தியா கூட்டி வந்த அம்மா, திரும்ப அமெரிக்கா போகவே இல்ல. அங்க அப்பா பையனுக்காக வெய்ட்டிங். கொஞ்ச நாள் பாத்துட்டு பையன் திரும்பி வரலைன்னதும், அமெரிக்காவில ஒரு கம்ப்ளைன்ட் செய்றாரு. அப்பவும் ஒண்ணும் வேலைக்காகலை, உடனே சென்னையில கம்ப்ளைன்ட். அதுக்குள்ள அம்மா பையனோட வேற ஸ்டேட்டுக்கு எஸ்கேப். இப்ப்டியே போகுது கதை.

ஆனா அதுக்கெல்லாம் ஹைலட் என்னன்னா.. ஜெய்ஸ்ரீ ஒரு மனநோயாளி அப்படீன்னு குற்றம் சாட்டறாரு.. அதுக்கு அமெரிக்காவில குடுத்த ஒரு ரிபோர்ட்ட ஆதாரமா காட்டறாரு. ஆனா, அந்த ரிப்பொர்ட்ல என்ன சொல்றாங்கன்னா.. இவங்களுக்கு கொஞ்சமா பிரச்சினை இருக்கு. அதுக்கு கொஞ்சம் ட்ரீட்மென்ட் தேவைன்னுதான். ரவி சந்ரன் என்னடான்னா அந்த அம்மாவை mental, insane, legal terrorist அப்படீன்னு ஒரே பழிதான்.

அப்பாவின் புலம்பல், குழந்தை ஒண்ணரை வருஷமா ஸ்கூலுக்கு போகலை, அவனை அலைக்கழிச்சு சோர்வடைய செய்றாங்க, அவனுக்கு அப்பாவை பத்தி ரொம்ப நெகட்டிவா சொல்லி குடுக்கறாங்க, அவன் அமெரிக்காவில ரொம்ப சொகுசா வாழ்ந்தவன், இப்போ ரொம்ப கஷ்டப்படறான்னு.

இப்போ பையனை தீவிரமா தேடுறாங்க. எவ்வளவு தீவிரமான்னா.. RESCUE ADITYA அப்படீன்னு வெப்சைட் வச்சு, அதை யாஹூவில விளம்பரம் குடுத்து.. நான் யாஹூ மெயில் செப் பண்ணும்போது இந்த விளம்பரத்தை பாத்துட்டு ஏதோ சுனாமியில காணாம போன பையன்னு நெனச்சேன். ஆனா, இவ்ளோ சீரியஸா இருக்கும்னு எதிர்பார்க்கல.

இப்பா அந்த அம்மாவை அவங்க சொந்த குடும்பமே கை கழுவிடுச்சு. ஆமாம் ஜெய்ஸ்ரீயோட அப்பா, "எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" அப்டீன்னு போலீஸ்லயும் கோர்ட்லயும் சொல்லிட்டாரு.

இது எல்லாம் ஒரு பக்க ஸ்டோரிதான். மற்ற பக்கத்தை, ஊர் விட்டு ஊர் மாறும் அம்மாதான் வந்து சொல்லணும். அவங்க தரப்பு நியாயங்களை (அப்படி ஏதாவது இருந்தா). உண்மையில கல்யாணம் செஞ்சு அவங்க வாழ்ந்த வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு யாருக்கும் தெரியாது. அந்த பொன்ணு இப்படி ஆனதுக்கு காரணம் என்னன்னும் வெளியிலருந்து யாராலயும் சொல்ல முடியாது. எல்லாத்துக்கும் முழுமுதல் காரணம் யாருன்னும் தெரியாது. கொஞ்சம் ஓவர் பெர்சனலா போய்ட்டேனா.. ஒக்கே இப்போ ஜெய்ஸ்ரீ கையிலதான் எல்லாம் இருக்கு.

இதையெல்லாம் ஏன் இவ்ளோ எழுதறேன்னு நெனக்கிறீங்களா? எல்லாம் அந்த ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ண நெனச்சுதான். என்னா பாடுபடும் அந்த பிஞ்சு.. ஊர் ஊரா அலைஞ்சு.. ஸ்கூல் போக முடியாம.. அம்மாவைத் தவிர வேர யாரையும் பாக்காம.. அய்யோ பாவம் குழந்தை

Friday, July 10, 2009

அறிவுகெட்......

'தட்'

'தட்' என்று வந்து விழுந்தது அந்த கல் கதவு மேல். ரத்த ஓட்டம் முழுவதும் தலைக்கேறி கோபம் வந்தது. வழக்கம் போல எழுந்து சென்று கதவைத் திறந்து "அறிவுகெட்.." இல்லை, அடுத்த கல்லுக்காக காத்திருக்கலாம் என மனது எண்ணியது. சிறிது நேர அமைதி... அதற்குப்பின் மீண்டும் ஒரு கல் 'தட்' என மோதி கதவை உடைத்துக்கொண்டு என் கண்களை நோக்கி... சட்டென்று தூக்கம் கலைந்தது. அரைத் தூக்கத்தில் என்ன நடந்தது என்று ஒரே புதிராக இருந்தது.

சோம்பலும் கையாலாகாத்தனமும் கோபத்துடன் கூட்டு சேர தூக்கம் முற்றிலுமாகக் கலைந்தது. அர்த்த ராத்திரியில் தூக்கம் கலைவதில் உள்ள வெறுப்பு வேறெதிலும் இல்லை. திடீரென நாய்களின் ஓலம் எழுந்து மறைந்து பின், மரண அமைதியாக இருந்தது. இருட்டு பயமுறுத்தியது. என்ன ஒரு கனவு, அப்படியே நிஜம் போல. உண்மையாக மனத்தின் ஓரத்தில் படிந்த பயங்கள், இயலாமைகள்தான் கனவாக உருவெடுக்கும் என எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது. மீண்டும் 'தட்' என்ற அந்த ஓசையை மனது எதிர்பார்த்தது.

இரவின் வெட்கையில் நாவறண்டு தண்ணீருக்காக ஏங்க, எழுந்து மண்பானையை நோக்கி நடந்தபோது அந்த ஓசை கேட்டது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன். ஓசையில் வேறுபாடு இருப்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது. மீண்டும் கதவை யாரோ தட்டும் ஓசை. கதவைத் திறக்க, வேர்த்து, விறுவிறுத்து நின்றது இருட்டில் ஒரு உருவம்.

"ஐயா வாசல் லைட்டை கொஞ்சம் போடுங்கய்யா, பாழாப்போன நாய்த்தொல்லை தாங்க முடியல", குரல் முனகலாக வந்தது.

"என்ன ஆச்சுப்பா? இந்த நேரத்தில?" கேள்விகளை அடுக்கியவாறே வாசல் விளக்கை எரிய விட, பகீரென்றது அவனது கெண்டைக்காலை மடித்துக் கட்டியிருந்த லுங்கியின் கீழ் பார்த்த கணம்.

"காட்டில தண்ணி காட்டிட்டு... மோட்டாரை நிறுத்திட்டு இப்பதான்யா வாரேன், வர்ர வழியில அந்த கறுப்பு கிடா நாய் காலில பாய்ஞ்சு...", மேலே பேச முடியாமல் திணறியவனை ஆசுவாசப்படுத்தியபோதுதான் கவனித்தேன், அந்த பக்கமாக வலம் வந்து கொண்டிருந்த நாலைந்து நாய்களை.

அவசரமாக சைக்கிளை வெளியே எடுத்து, கதவை பூட்டினேன். சைக்கிள் பின்புறம் அவனை அமர்த்தி மருத்துவர் வீடு நோக்கி மிதித்தேன்.

-------------------------------------

வீடு திரும்பும்போது சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால், தள்ளிக் கொண்டே நடந்தேன்.

நடக்கும்போது மனம் முழுவதும் அந்த இளைஞர்களை வசை பாடிக்கொண்டே வந்தேன். தினமும் நடு இரவு வரை அரட்டை அரங்கம் நடத்தி விட்டு சந்து வழியே செல்லும் பயல்களின் வேலைதான் இது. என்னதான் உடம்பு வளர்ந்தாலும் அறிவு வளராதவர்கள். அது பாட்டுக்கு சாதுவாக செல்லும் நாயை கல்லால் அடித்து வம்புக்கு இழுப்பானேன். அப்படி என்னதான் நடு இரவு வரை பேச்சோ. நாய்கள் அவற்றின் கோபத்தை ஒன்றுமறியாதவர்களை பதம் பார்த்து தீர்த்துக் கொள்கின்றன. கையில் கல் இல்லாதவன் ஒன்றும் அறியாதவந்தானே. அப்படி அந்த நாய்களை பழக்கி விட்டார்களே....

அதை விட, நாயடிக்கும் சாக்கில் வீட்டு கதவின் மீது கல்லெறிவதுதான் இவர்களது பொழுதுபோக்கு. ஒரு நாள், இரு நாள் என்றால் பரவாயில்லை. பல நாட்கள், பல கற்கள் என் கதவு மீது. தூக்கம் கலைந்து எழுந்து, கதவைத் திறந்து "அறிவுகெட்..." என கத்தும் முன்னரே தபதப என தலைகால் தெறிக்க ஓட்டம். அப்படி என்ன இதில் வேடிக்கையோ?

இருட்டின் நிசப்தத்தில் "அறிவுகெட்..." என உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. சட்டென நின்றேன். பின்னாலெ சிறு சத்தம் கேட்டது. என் பின்னே ஒரு நாய் பதுங்குவது தெரிந்தது. மெதுவாக திரும்பி பார்த்தேன். ஒன்றல்ல மூன்று நாய்கள். தெருவோர விளக்கு வெளிச்சத்தில் அவற்றின் கண்கள் மின்னின. குலை நடுக்கம் எடுத்தது. ஓட்டம் பிடிக்கலாமா? இல்லை இல்லை. இரண்டடி பின்வாங்கி சராரென்று குனிந்து ஒரே வாறலில் கையில் இரண்டு கற்கள்.

கையை ஓங்க நாய்கள் எடுத்தன ஓட்டம். ஓங்கின கையை இறக்காமல் ஒரு நாயை நோக்கி கல்லை எறிந்தேன். சில நொடிகள் காற்றில் பயணித்த கல் தரையில் பட்டு எம்பி நேரே சென்று.. 'தட்' . ஆம், என் வீட்டு கதவுதான்.

நல்ல வேளை நான் உள்ளே இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் கதவைத் திறந்து என்னை நானே, "அறிவுகெட்....".