Thursday, July 16, 2009

ஓடும் அன்னை, துரத்தும் தந்தை, அய்யோ பாவம் குழந்தை

சினிமா கதை தோற்கும் அளவுக்கு இருக்கு இந்த நிஜக்கதை. தன் குழந்தையை அப்பா தீவிரமா தேடறாரு. ஆனா, அம்மா அந்த குழந்தையோட ஒரு "Fugitive" ஸ்டைலில ஓடறாங்க. இடம் மாத்தி இடம், நகரம் மாத்தி நகரம். சென்னை, டில்லி, உ.பி, கர்நாடகான்னு எல்லா போலீசும் தேடியும் கிடைக்கலையாம். அடேங்கப்பா.. என்னா ப்ளானிங். ப்ளானிங்கா இல்ல போலீசோட தெறமை இவ்ளோதானா?

இத்தனைக்கும் அந்தம்மா எங்க எப்போ இருந்தாங்க.. எப்பல்லாம் வங்கியில பணம் எடுத்தாங்க, எந்த ஸ்கூலில மகனை (கொஞ்ச நாள்) படிக்க வைச்சாங்க அப்படீங்கற விவரமெல்லாம் கிடைச்சிருக்கு. ஆனா பிடிக்க முடியலை. அப்பாவோ, பையனுக்காக பாட்டெல்லாம் பாடி அதை வெப் தளத்தில வேற போட்டு வச்சிருக்காரு.. டாக்குமென்டரி எல்லாம் கூட.. என்னதான் நடக்குது?

ஜெயஸ்ரீ, ரவி சந்ரன் ரெண்டு பேர்க்கும் அமெரிக்காவில பிறந்த குழந்தைதான் ஆதித்யா. ஆனா, அவன் பிறந்த கொஞ்ச நாளிலயே திருமணத்துக்குள்ள பிளவு. அமெரிக்கா கோர்ட்டுக்கு போறாங்க. அங்க ஒரு டீடெய்லு கஸ்டடி ஆர்டர் போடறாங்க. என்னா டீடெய்லு.. அப்பப்பா.. பையன் எப்பெப்ப யார் கூட இருக்கணும், எப்போ அவனை வெக்கேஷன் கூட்டிட்டு போகலம், ரெண்டு பேரும் ஒரே நாட்களில வெக்கேஷன் கூட்டிட்டு போக ஆசைப்பட்டா, Odd (ஒற்றை எண்) ஆண்டில அம்மாவும், Even (இரட்டை எண்) ஆண்டில அப்பாவும் தேர்வு செய்ற தினங்கள்தான் செல்லுபடியாகும்.

லேபர் டே அப்பாகூட, ஹேலோவின் அம்மா கூட, வெட்டெரன்ஸ் டே அப்பாகூட, பொங்கல் அம்மாகூட இப்படீனு பல பக்கங்கள் போகுது. ச்சே.. பேசாம அந்த குழந்தைக்காவது கூடி வாழலாம். என்ன ஒரு டார்ச்சர்..

அதுல அம்மா பையனை வருஷத்தில மூணு வாரம் இந்தியா கூட்டிப்போகலாம்னு ஒரு ஆர்டர் சொல்லுது. அங்கதான் ஆரம்பிக்குது ஆப்பு அந்த குழந்தைக்கு. 2005 ல இந்தியா கூட்டி வந்த அம்மா, திரும்ப அமெரிக்கா போகவே இல்ல. அங்க அப்பா பையனுக்காக வெய்ட்டிங். கொஞ்ச நாள் பாத்துட்டு பையன் திரும்பி வரலைன்னதும், அமெரிக்காவில ஒரு கம்ப்ளைன்ட் செய்றாரு. அப்பவும் ஒண்ணும் வேலைக்காகலை, உடனே சென்னையில கம்ப்ளைன்ட். அதுக்குள்ள அம்மா பையனோட வேற ஸ்டேட்டுக்கு எஸ்கேப். இப்ப்டியே போகுது கதை.

ஆனா அதுக்கெல்லாம் ஹைலட் என்னன்னா.. ஜெய்ஸ்ரீ ஒரு மனநோயாளி அப்படீன்னு குற்றம் சாட்டறாரு.. அதுக்கு அமெரிக்காவில குடுத்த ஒரு ரிபோர்ட்ட ஆதாரமா காட்டறாரு. ஆனா, அந்த ரிப்பொர்ட்ல என்ன சொல்றாங்கன்னா.. இவங்களுக்கு கொஞ்சமா பிரச்சினை இருக்கு. அதுக்கு கொஞ்சம் ட்ரீட்மென்ட் தேவைன்னுதான். ரவி சந்ரன் என்னடான்னா அந்த அம்மாவை mental, insane, legal terrorist அப்படீன்னு ஒரே பழிதான்.

அப்பாவின் புலம்பல், குழந்தை ஒண்ணரை வருஷமா ஸ்கூலுக்கு போகலை, அவனை அலைக்கழிச்சு சோர்வடைய செய்றாங்க, அவனுக்கு அப்பாவை பத்தி ரொம்ப நெகட்டிவா சொல்லி குடுக்கறாங்க, அவன் அமெரிக்காவில ரொம்ப சொகுசா வாழ்ந்தவன், இப்போ ரொம்ப கஷ்டப்படறான்னு.

இப்போ பையனை தீவிரமா தேடுறாங்க. எவ்வளவு தீவிரமான்னா.. RESCUE ADITYA அப்படீன்னு வெப்சைட் வச்சு, அதை யாஹூவில விளம்பரம் குடுத்து.. நான் யாஹூ மெயில் செப் பண்ணும்போது இந்த விளம்பரத்தை பாத்துட்டு ஏதோ சுனாமியில காணாம போன பையன்னு நெனச்சேன். ஆனா, இவ்ளோ சீரியஸா இருக்கும்னு எதிர்பார்க்கல.

இப்பா அந்த அம்மாவை அவங்க சொந்த குடும்பமே கை கழுவிடுச்சு. ஆமாம் ஜெய்ஸ்ரீயோட அப்பா, "எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" அப்டீன்னு போலீஸ்லயும் கோர்ட்லயும் சொல்லிட்டாரு.

இது எல்லாம் ஒரு பக்க ஸ்டோரிதான். மற்ற பக்கத்தை, ஊர் விட்டு ஊர் மாறும் அம்மாதான் வந்து சொல்லணும். அவங்க தரப்பு நியாயங்களை (அப்படி ஏதாவது இருந்தா). உண்மையில கல்யாணம் செஞ்சு அவங்க வாழ்ந்த வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு யாருக்கும் தெரியாது. அந்த பொன்ணு இப்படி ஆனதுக்கு காரணம் என்னன்னும் வெளியிலருந்து யாராலயும் சொல்ல முடியாது. எல்லாத்துக்கும் முழுமுதல் காரணம் யாருன்னும் தெரியாது. கொஞ்சம் ஓவர் பெர்சனலா போய்ட்டேனா.. ஒக்கே இப்போ ஜெய்ஸ்ரீ கையிலதான் எல்லாம் இருக்கு.

இதையெல்லாம் ஏன் இவ்ளோ எழுதறேன்னு நெனக்கிறீங்களா? எல்லாம் அந்த ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ண நெனச்சுதான். என்னா பாடுபடும் அந்த பிஞ்சு.. ஊர் ஊரா அலைஞ்சு.. ஸ்கூல் போக முடியாம.. அம்மாவைத் தவிர வேர யாரையும் பாக்காம.. அய்யோ பாவம் குழந்தை

Friday, July 10, 2009

அறிவுகெட்......

'தட்'

'தட்' என்று வந்து விழுந்தது அந்த கல் கதவு மேல். ரத்த ஓட்டம் முழுவதும் தலைக்கேறி கோபம் வந்தது. வழக்கம் போல எழுந்து சென்று கதவைத் திறந்து "அறிவுகெட்.." இல்லை, அடுத்த கல்லுக்காக காத்திருக்கலாம் என மனது எண்ணியது. சிறிது நேர அமைதி... அதற்குப்பின் மீண்டும் ஒரு கல் 'தட்' என மோதி கதவை உடைத்துக்கொண்டு என் கண்களை நோக்கி... சட்டென்று தூக்கம் கலைந்தது. அரைத் தூக்கத்தில் என்ன நடந்தது என்று ஒரே புதிராக இருந்தது.

சோம்பலும் கையாலாகாத்தனமும் கோபத்துடன் கூட்டு சேர தூக்கம் முற்றிலுமாகக் கலைந்தது. அர்த்த ராத்திரியில் தூக்கம் கலைவதில் உள்ள வெறுப்பு வேறெதிலும் இல்லை. திடீரென நாய்களின் ஓலம் எழுந்து மறைந்து பின், மரண அமைதியாக இருந்தது. இருட்டு பயமுறுத்தியது. என்ன ஒரு கனவு, அப்படியே நிஜம் போல. உண்மையாக மனத்தின் ஓரத்தில் படிந்த பயங்கள், இயலாமைகள்தான் கனவாக உருவெடுக்கும் என எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது. மீண்டும் 'தட்' என்ற அந்த ஓசையை மனது எதிர்பார்த்தது.

இரவின் வெட்கையில் நாவறண்டு தண்ணீருக்காக ஏங்க, எழுந்து மண்பானையை நோக்கி நடந்தபோது அந்த ஓசை கேட்டது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன். ஓசையில் வேறுபாடு இருப்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது. மீண்டும் கதவை யாரோ தட்டும் ஓசை. கதவைத் திறக்க, வேர்த்து, விறுவிறுத்து நின்றது இருட்டில் ஒரு உருவம்.

"ஐயா வாசல் லைட்டை கொஞ்சம் போடுங்கய்யா, பாழாப்போன நாய்த்தொல்லை தாங்க முடியல", குரல் முனகலாக வந்தது.

"என்ன ஆச்சுப்பா? இந்த நேரத்தில?" கேள்விகளை அடுக்கியவாறே வாசல் விளக்கை எரிய விட, பகீரென்றது அவனது கெண்டைக்காலை மடித்துக் கட்டியிருந்த லுங்கியின் கீழ் பார்த்த கணம்.

"காட்டில தண்ணி காட்டிட்டு... மோட்டாரை நிறுத்திட்டு இப்பதான்யா வாரேன், வர்ர வழியில அந்த கறுப்பு கிடா நாய் காலில பாய்ஞ்சு...", மேலே பேச முடியாமல் திணறியவனை ஆசுவாசப்படுத்தியபோதுதான் கவனித்தேன், அந்த பக்கமாக வலம் வந்து கொண்டிருந்த நாலைந்து நாய்களை.

அவசரமாக சைக்கிளை வெளியே எடுத்து, கதவை பூட்டினேன். சைக்கிள் பின்புறம் அவனை அமர்த்தி மருத்துவர் வீடு நோக்கி மிதித்தேன்.

-------------------------------------

வீடு திரும்பும்போது சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால், தள்ளிக் கொண்டே நடந்தேன்.

நடக்கும்போது மனம் முழுவதும் அந்த இளைஞர்களை வசை பாடிக்கொண்டே வந்தேன். தினமும் நடு இரவு வரை அரட்டை அரங்கம் நடத்தி விட்டு சந்து வழியே செல்லும் பயல்களின் வேலைதான் இது. என்னதான் உடம்பு வளர்ந்தாலும் அறிவு வளராதவர்கள். அது பாட்டுக்கு சாதுவாக செல்லும் நாயை கல்லால் அடித்து வம்புக்கு இழுப்பானேன். அப்படி என்னதான் நடு இரவு வரை பேச்சோ. நாய்கள் அவற்றின் கோபத்தை ஒன்றுமறியாதவர்களை பதம் பார்த்து தீர்த்துக் கொள்கின்றன. கையில் கல் இல்லாதவன் ஒன்றும் அறியாதவந்தானே. அப்படி அந்த நாய்களை பழக்கி விட்டார்களே....

அதை விட, நாயடிக்கும் சாக்கில் வீட்டு கதவின் மீது கல்லெறிவதுதான் இவர்களது பொழுதுபோக்கு. ஒரு நாள், இரு நாள் என்றால் பரவாயில்லை. பல நாட்கள், பல கற்கள் என் கதவு மீது. தூக்கம் கலைந்து எழுந்து, கதவைத் திறந்து "அறிவுகெட்..." என கத்தும் முன்னரே தபதப என தலைகால் தெறிக்க ஓட்டம். அப்படி என்ன இதில் வேடிக்கையோ?

இருட்டின் நிசப்தத்தில் "அறிவுகெட்..." என உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. சட்டென நின்றேன். பின்னாலெ சிறு சத்தம் கேட்டது. என் பின்னே ஒரு நாய் பதுங்குவது தெரிந்தது. மெதுவாக திரும்பி பார்த்தேன். ஒன்றல்ல மூன்று நாய்கள். தெருவோர விளக்கு வெளிச்சத்தில் அவற்றின் கண்கள் மின்னின. குலை நடுக்கம் எடுத்தது. ஓட்டம் பிடிக்கலாமா? இல்லை இல்லை. இரண்டடி பின்வாங்கி சராரென்று குனிந்து ஒரே வாறலில் கையில் இரண்டு கற்கள்.

கையை ஓங்க நாய்கள் எடுத்தன ஓட்டம். ஓங்கின கையை இறக்காமல் ஒரு நாயை நோக்கி கல்லை எறிந்தேன். சில நொடிகள் காற்றில் பயணித்த கல் தரையில் பட்டு எம்பி நேரே சென்று.. 'தட்' . ஆம், என் வீட்டு கதவுதான்.

நல்ல வேளை நான் உள்ளே இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் கதவைத் திறந்து என்னை நானே, "அறிவுகெட்....".

Thursday, July 2, 2009

தப்பு பண்ணிட்டேம்பா.. (குழந்தைகளுக்கு மட்டுமில்ல பெர்யவங்களுக்குமான குட்டிக்கதை)


வழக்கம்போல மதிய உணவுக்கு வீடு வந்து சேர்ந்தேன். எப்போதும் தூரத்திலேயே கேட்கும் அமிதாவின் சத்தம் அன்று கேட்கவில்லை. அமிதா என் ஊகேஜி படிக்கும் நண்டு. பள்ளி விட்டு வந்ததும், மேல் வீட்டு வாலுகளுடன் விளையாட்டில் வீடு அமர்க்களப்படும். ஆனால், இன்று அமைதியாக இருந்தது.

மெதுவாக கதவைத் திறந்து பார்த்தேன். அதிசயமாக தொல்லைக்காட்சி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக சோபாவில் அமைதியாக அமிதா அம்ர்ந்திருந்த விதம் கொஞ்சம் கவலை தந்தது

"என்னடா செல்லக்குட்டி டல்லா இருக்கு?"

"ப்ச்" என்றொரு ஒலி மட்டுமே வந்தது.

கிட்ட நெருங்கி, "ஏய் என்னாச்சு?"

"ஒண்ணும் இல்ல", அப்பாடி பேச்சாவது வந்ததே..

"என்னடா.. வர்ஷனா, முதுளா யாரும் விளையாட வரலயா?"

"வந்தாங்க.. நாந்தான் போச் சொல்லிட்டேன்"

"ஏண்டா?"

வெறுமனே என்னைத் திரும்பி பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"ஸ்கூல்ல மிஸ் திட்டிட்டாங்களோ?"

"இல்ல மிஸ்லாம் ஒண்ணும் பண்ணல"

"யாரு மேலடா கோபம்.. அம்மா எதுனாலும் சொன்னாங்களா?"

சட்டென்று சமையலறையிலிருந்து சத்தம் வந்தது, "அதானே, இன்னும் எங்கடா என்னை இழுக்கலன்னு பாத்தேன்.."

"சரி, நீயாவது சொல்லு.. பாப்பாக்கு என்னாச்சு"

"எனக்கு தெரியல.. நான் கிச்சன்ல பிஸி, ஜூஸ் குடுத்தேன் வேண்டாம்னு சொல்லிட்டா.. பாருங்க மேசையில அப்படியே இருக்கு"

சட்டென்று என் கவலை கூடியது. என்னடா இது ஒரு நர்சரி குழந்தைக்கு வாழ்க்கையில் இவ்வளவு சோகமா.. சரி தாஜா பண்ணுவதே ஒரே வழி என்று தொடங்கினேன்.

"என்னம்மா.. அப்பா மேலெ கோவமா? நான் ஏதானும் வாங்கித் தரணுமா?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா"

"அப்ப என்னதாண்டா கோவம்"

"என் மேலயே எனக்கு கோவம்"

"உன் மேலயேவா?", அதிர்ச்சியா இருந்தது. தன் மேலேயே கோபப்படும் வயசா இது?, "ஏன்? என்ன கோவம்"

"நீங்தானே சொன்னீங்க.. யார்க்காவது நம்ளால கஷ்டம்னா, அது தப்புண்ணு"

ஒன்றும் புரியவில்லை எனக்கு, "என்னம்ம சொல்ற? உன்னால யாருக்காவது கஷ்டமா? வர்ஷனாவுக்கா? முதுளாவுக்கா?.."

"இல்லப்பா.. நான் ஒரு தப்பு பண்ணிட்டேன், அதனாலதான் கஷ்டம் வந்திச்சு"

"என்ன தப்பு பண்ணின? யாருக்கு கஷ்டம்?"

"அது.. என்னால பென்னியோட பொம்மையெல்லாம் தொலைஞ்சி போயிடுச்சி"

"பென்னியா? ஸ்கூல்ல உன் ஃப்ரண்டா?.. பரவாயில்ல நாம அவனுக்கு வேற பொம்மை வாங்கி கொடுக்கலாம்.. சரி.. உன்னால எப்படி தொலைஞ்சிச்சு?"

"டோரா சொல்ல சொன்னத நான் சொல்லலியே.."

"டோராவா? என்ன சொல்ல சொன்னிச்சு..?", புரிந்த மாதிரியும் இருந்தது.. புரியாத மாதிரியும்.

"குள்ளநரி திர்டக் கூடாதுன்னு, மூணு வாட்டி சொல்ல சொன்னிச்சு.. நாந்தான் சொல்லலியே"

"ஏன் சொல்லலை?"

"டோராவே சொல்லிடும்னு நெனச்சேன்"

"அப்புறம்"

"குள்ளநரி பொம்மையெல்லாம் வீசிடுச்சி.. என்மேலெயே கோவம்னால நான் டீவிய ஆஃபிட்டேன்"



------------------------------------------

Wednesday, June 17, 2009

வள்ளியம்மையின் பழுப்பு கண்கள்

“மக்கள் வெள்ளத்தில் நீந்தி” என்கிற அரதப்பழசான வசனம் ஞாபகத்துக்கு வந்தது. வைகையை விட்டு இறங்கியவர்கள், பல்லவன் மீது ஏறப்போவோரை நெறித்துத் தள்ளி, வீட்டுக்கு போகும் அவசரம் காட்டினார்கள். கூட்டத்தில் முண்டிக் கொண்டே பிளாட்பாரத்தில் ஏதாவது புத்தகக் கடை தென்படுதான்னு பார்த்துக்கொண்டே வந்தேன். பழரசம், பிஸ்கட், மினரல் தண்ணீர் எல்லாம் கடந்து D12 வந்தது.

கடைசியாக தென்பட்ட கடையில் ஒரு “மாஸா” வாங்கியவாறு கேட்டேன், “புக் ஸ்டால் எதுவும் பக்கத்தில இல்லீங்களா?”

“நாலுலதாங்க கிடைக்கும்”

மணி 3.20.. இனிமேல் ஏறி இறங்கி புத்தகம் வாங்கி வரும்போது பல்லவன் மாம்பலம் தாண்டி விடுவான். பையை மேலே போட்டுவிட்டு, சன்னலோர என் இருக்கையில் உட்கார்ந்தேன். யாரும் அதுவரை அந்த கேபினுக்குள் வரவில்லை. தாம்பரத்தில் ஏறுவார்களோ...

வண்டி கிளம்ப சில “இன்னும் சிறிது” நேரமே இருக்கும்போதுதான் அவசர அவசரமாய் ஏறினார்கள் அம்மாவும், பென்ணும். நாற்பதை நெருங்கும் நடுத்தர வயது அம்மா, மறுபக்கம் திரும்பியவாறே இருந்தாள். முகத்தை காட்ட வெட்கம் போலும். சுற்றிலும் பார்த்து விட்டு, என்னை பார்த்து சிரித்தாள் குட்டிப்பெண்.. நானும் சிரித்தேன்.

“எந்த கிளாஸ்மா படிக்கிற?”

“செவந்த் முடிச்சு எய்ட்த் போறேன் அங்கிள்”

என் இந்த கேள்வி காதில் விழுந்ததால் என் பக்கம் முகத்தை திருப்பினாள் அம்மா... அவளை பார்த்த ஒரு கணம், என்னுள் ஏதோ செய்தது.. மென்மையான இந்த அதீத அழகு எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது.. எங்கே.. எங்கே இவளை பார்த்திருக்கிறேன்.. அவள் கண்களை மீண்டும் பார்க்க வேண்டும் என என்னுள் ஏதோ தூண்டியது.. அப்படி ஒரு அந்நிய பெண்ணை பார்ப்பது முறையல்ல என்று மனம் கூறியது.

ஒவ்வொரு முறை அவள் கண்களை என் கண்கள் எதேச்சையாகவோ வேண்டுமென்றோ சந்தித்தபோதும், எனக்குள் அதிர்வுகள் தொடர்ந்தன.. இது முறையல்ல என புத்தி கண்டித்த வண்ணம் இருந்தது.. கண்களை மூடி உறக்கம் வரவழைக்க முயற்சி தோல்வி கண்டது.. மூடிய கண்ணுக்குள்ளும் அவள் கண்களே தெரிந்தன..

எழுந்து சென்று பெட்டி கதவருகே நின்றேன். மடமடவென குளிர்நீரை குடித்தேன். தாம்பரத்தில் வண்டி நின்ற சில நொடிகளில் இறங்கி பயணியர் அட்டவணையைப் பார்த்தேன்.. 35..36..37......38..அபிநயா..13........39..வள்ளி.. என் கண்கள் நிலைகுத்தின..”வள்ளி” இவ்வளவு பரிச்சயமான பெயரா..

“திருச்சிராப்பள்ளி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ்.... இன்னும் சிறிது நேரத்தில்..”, தாவி ஏறினேன்.
--------------------------------------------------

“உன்னை.. கழுவில் ஏற்றியோ, சிரச்சேதம் செய்தோ, கொல்லச் சொல்லி மன்னர் மன்னன் உத்தரவு”

“அய்யா.. என்ன இது. இதற்கு வேறு வழியே இல்லையா”

“ம்..கூம். எதுவும் இல்லை.. இன்று இரவே உன் தலை கொய்யப்படும்”, என்று கூறிச் சென்றான் அந்த முரட்டு ஆசாமி.

மௌனியாய் அமர்ந்திருக்கும்போது அந்த ரகசிய குரல் கேட்டது..”விஜயாங்கா..”. அதே முரடன்.

“என்ன”

“சத்தம் போடாதே.. நீ உயிர் தப்ப ஒரே வழி உள்ளது”

“ம்.. என்ன வழி”

“கையூட்டு”

“கையூட்டா!”

“நூறு பொற்காசுகள்.. எனக்கு. என்னுடன் உள்ள மற்றொரு காவலனுக்கு நூறு.. பிறகு..”

“வேண்டாம்.. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை”

“பெரிய இடத்து தொடர்பு மட்டும்தான் உண்டோ?”, கிண்டலில் ஆத்திரம் கலந்து தொனித்தது, “அப்படியானால் தலை தப்பாது.. வாழ்த்துகள்”

மன அழுத்தம் தாளாமல் உறங்கிப் போனேன்.
--------------------------------------------------

சட்டென வந்த இரைச்சலில் தூக்கம் கலைந்தது..

“டீ.. டீ சூடா டீ..’ என் கடந்து போனான் ஒருவன். பைகளை தூக்கிக் கொண்டு, தங்கள் பெட்டியை தேடி அவசர நடை நடந்தனர் சிலர்.

“எந்த ஸ்டேஷன்”, என்றேன் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம்.

“செங்கல்பட்டு”, பட்டெனெ பதில் வந்தது அபிநயாவிடமிருந்து.

“நீ தூங்கலையா”

“இல்ல எனக்கு ட்ரெய்ன்ல தூக்கம் வராது அங்கிள்” , சொல்லும்போதே அது பொய்யோ என்று பட்டது.

சிரித்தபடி திரும்பியபோது.. மறுபடியும் அதே கண்கள்..பழுப்பு நிற கண்கள். அதே அதிர்வுகள். வள்ளி மீதிருந்து அகல மறுத்தன என் கண்கள். அவளுக்கும் அது தர்மசங்கடமாக இருந்திருக்கும் போலும், வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இனி இது சரிப்படாது என்று, எழுந்தேன். பேசாமல் வேறு இடத்தை பிடித்து உட்காரலாம் என்றால், பெட்டி முழுதும் மக்கள்.. சிலர் நின்று கொண்டும்.

“அடுத்து என்ன ஸ்டேஷன் வரும் அங்கிள்” என்றாள் குட்டிப் பெண்.

“அடுத்து மருவத்தூர்.. இல்ல.. அங்க ட்ரெய்ன் நிக்காது.. விழுப்புரம்.. அதுக்குள்ளயேவா.. வந்து லால்குடி.. இல்ல இல்ல...”

கலகலவென்று சிரிப்பொலி என்னை இடைமறித்தது. பழுப்பு நிறக் கண்களில் கேலி தொனிக்க என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் முதல் முறையாய் என் முகம் பார்த்து பேசினாள்.
--------------------------------------------------

“என்ன தடுமாற்றம் விஜயாங்கா, நீ போகும் திசை உனக்கே தெரியவில்லையா, இதில் நாங்கள் வேறு உனக்கு சுமை”

“இல்லை வள்ளி.. இருள் சூழ்ந்து விட்டதால் குழப்பம்.. இன்னும் இரண்டு கிராமங்கள்தான். அதன்பின் எல்லை வந்து விடும்”

“எல்லையில் பிடிபடக் கூடாதே.. இறைவா.. முருகா..”

“அதற்கு ஒரு உபாயம் உண்டு.. ஆனால்”

“ஆனால் என்ன.. விடுதலைக்காக எதையும் செய்யலாம் விஜயாங்கா”

“அது.. சொல்லவே நா எழமாட்டேன் என்கிறது.. நீங்களும், அபியும் பிச்சைக்காரி தோற்றம் தரித்து சாவடியை கடந்து விடுங்கள்”

“நீ”

“சாவடி கடந்ததும் தென்படும் முதல் கோவிலில் தங்கி இருங்கள். நான் பின்னாலேயே பைத்தியக்காரன் தோற்றத்தில் வந்து விடுவேன்.”

நெடிய மௌனம் கவலையைத் தந்தது.. எங்கள் உரையாடலை சிறிது கவனியாமல் அபிராமி ஏதோ தனக்குத் தானே விளையாடிக் கொண்டிருந்தாள்.

“ஏன். கவலையா.. அரசியாக வலம் வந்தவரை, பிச்சைக்காரி ஆக்கிவிட்டேனே என்று கவலையா”

பளிச்சென்று வந்த பதில், “ஆம், சிறிது நெருடல்தான்.. ஆனாலும் பத்தோடு பதினொன்றாக அரசி வேடம் தரிப்பதை விட விடுதலையுடன் பிச்சைக்காரியாக இருத்தல் ஆனந்தமே”
--------------------------------------------------

வண்டி விழுப்புரத்தில் நின்றிருந்தது. இப்போதாவது ஒரு புத்தகம் வாங்கி விட வேண்டும். புத்தகத்துக்குள் தலை கவிழ்த்தால் பழுப்பு கண்களின் பார்வையிலிருந்து தப்பி விடலாம்..”

மாலை வேளை பசியை தணித்துவிட நடைமேடை முழுதும் ஆண்கள் ஏதாவது தின்று கொண்டிருந்தார்கள். அவசர உணவு தாங்கிய வண்டிகள் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தன. இரைச்சல் சிறிதே நிரம்பிய அழகிய மாலை நேரம்.

“வட, பஜ்ஜி ஸ்சூடா வட, பஜ்ஜி” என்று வந்தவரிடம் கேட்டேன். “புக் ஸ்டால்!”

“இப்பிடி போயி அடுத்த பிளாட்பாரத்துல வாங்கிடுங்க.. வண்டி நிக்கும்.. போயிட்டு வந்திரலாம்”

குறுக்கு வழியில் அடுத்த நடைமேடையில் ஒரு விகடன் வாங்கிக் கொண்டு வந்து சில நிமிடங்கள் பெட்டிக்கு வெளியிலேயே காத்திருந்தேன்.
--------------------------------------------------

“வெகு நேரம் காத்திருந்தாயா விஜயாங்கா?”

“சுவரேறி குதித்து காவலர் கண்ணில் படாமல் வருவதே பெரும்பாடு..இதில் மறைந்து காத்திருத்தல் வேறு”

“மன்னித்துக் கொள் விஜயாங்கா.”

“அரசி. என்ன இது.. நான் உங்களை..”

“அரசி என்று என்னை விளிக்காதே விஜயாங்கா.. எத்தனை முறை கூறியிருக்கிறேன்.. நாம் தனிமையில் சந்திக்கும்போதாவது..”

“வள்ளி.. உங்கள் அழகு முகத்தையும், அந்த பழுப்பு நிற கண்களையும் காண எத்தனை சுவர் வேண்டுமானாலும் ஏறிக் குதிக்கலாம்”

“கேட்டு கேட்டு அலுத்த அதே வார்த்தைகள்”, என்னும்போது கொஞ்சலான ஒரு சினம்.

“எனக்கு அலுக்கவில்லையே”

“சரி.. எப்போது எனக்கு விடுதலை?”

“விரைவிலேயே...”

“சரி இதற்கு மேல் தங்க முடியாது.. ஐயம் பூத்து விடும்”

“இரண்டு நாழிகை காத்திருத்தலுக்குப் பின், இரண்டு நாடி சந்திப்பு.. ம்”

வள்ளி சென்ற சில நாடிகளில் காவலர்கள் சூழ்ந்தனர்.
--------------------------------------------------

குழந்தையிடம் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த வள்ளி என்னைப் பார்த்ததும் திரும்பி என்னை நோக்கி அமர்ந்து கொண்டாள். நான் புத்தகத்தில் மூழ்குவது போல் நடித்தேன். அந்த கண்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை அடக்கினேன்.

“நீங்க திருச்சிதானா?”

கேட்டது அவள்தானா.. ஆச்சரியமாக இருந்தது. கேட்காதது போல புத்தகத்துள் முகத்தை மறைக்கலாமா என்று எண்ணினேன். ஆனால்

“ஆமா.. நீங்க?”, கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நழுவ விட முடியவில்லை.

“நாங்க புதுக்கோட்டை..”

“ஓ.. திருச்சியில இறங்கி மறுபடியும் பயணமா?.. ட்ரெயின் ஏற்கெனவே லேட்டே..”

“ஆமா.. ஆனாலும் போய்த்தானே ஆகணும்”

“ஜங்ஷனுக்கு யாராவது வருவாங்களா?”

சிறிது தயக்கத்துக்குப் பின் கூறினாள், “இல்ல.. யாரும் இல்ல.. நாங்களேதான்”

“புதுக்கோட்டையில எங்க தாத்தா இருக்காங்க.. அவங்க கஷ்டப்பட வேணாம்னு, அம்மா வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க”, அபியும் கலந்தாள் எங்கள் உரையாடலில்.

“ஓ.. உங்க அப்பா வரலையா?”, அபியை பார்த்து நான் கேட்டேன்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவர் முகங்களும் சட்டென்று வாடியது போல் தோன்றியது.
--------------------------------------------------

“உனக்கு விடுதலை.. போகலாம்” என்றான் முரடன்.

“மன்னர் மன்னன் மனம் மாறி விட்டாரா”

“இல்லை உன் காதலின் வலிமை கண்டு நாங்கள் மனம் மாறி விட்டோம்”

“என்ன உளறல் இது?”

“போ.. சரியாக நள்ளிரவில் இந்த இடத்தைவிட்டு போ. உனக்காக ஒரு குதிரையும் ஏற்பாடாகி இருக்கிறது. தெப்பக் குளத்து சத்திரத்தில் உனக்காக காத்திருப்பார் உன் ஆசை அரசி”

“ஓ எல்லாம் அவர் ஏற்பாடுதானோ.. எத்தனை பொற்காசுகள் பெற்றாய் இதற்காக?”

“அதெல்லான் உனக்கெதற்கு? சோழ நாட்டை விட்டு போய் உனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள். உன் உடல் என்று வேறு ஒரு திருடனின் உடலை காட்டி இந்த வழக்கு முடிக்கப்படும்.

இது சரிதானா என்ற குழப்பத்துடன் அமர்ந்திருந்தேன். பழுப்பு நிறக் கண்கள் என்னை ஆட்கொண்டன. இதை விட்டால் வேறு வழியில்லை.
--------------------------------------------------

“எப்பம்மா ஜங்ஷன் வரும்?”, அலுப்புடன் கேட்டாள் குட்டி அபிநயா.

“நார்மலா ஒம்பது மணிக்கெல்லாம் போய்டும்.. இன்னைக்கு பத்து மணி ஆய்டும் போலருக்குது”, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெரியவர் உதவினார்.

“இல்ல ஒரு ஒம்பதேமுக்காலுக்கு போய்டும்னு நெனக்கிறேன்” என்றேன் நான்.

“அடுத்தது ஜங்ஷனா?” அவள் அவசரம் அவளுக்கு.

“இல்லம்மா.. அடுத்து லால்குடி, அப்புறம் ஸ்ரீரங்கம்.. “

“அதுக்கப்புறமாவது ஜங்ஷன் வருமா?”

“இல்ல.. பொன்மலை குறுக்க நிக்கும்”

மறுபடியும் சிரிப்பொலி

பொன்னான சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமே, “பத்து மணிக்கு அப்புறம் குழந்தையையும் கூட்டிட்டு எப்படி நீங்க புதுக்கோட்டை வரை போவீங்க..”

குழப்பத்துடன் பார்த்தன பழுப்பு கண்கள்..

“இல்ல, உங்களுக்கும் பிரச்சினை இல்லன்னா, என் வீட்டிலேயே இருந்திட்டு காலையில ஊருக்கு போகலாமே”

“இல்ல.. இல்ல.. நோ தேங்க்ஸ்”, அவசர அவசரமாக மறுத்தாள்

பக்கத்தில் ஐபாட் அணிந்து பாட்டு கேட்பவன் போல் இருந்த மஞ்சள் டீ-ஷர்ட் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்தான்.

தடதடத்தபடி கொள்ளிடத்தை கடந்தது வண்டி. கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்தாள் அபிநயா.
--------------------------------------------------

“அம்மா எனக்கு உறக்கம் வருகிறது”, கண்கள் சொருக மடியில் சாய்ந்தாள் அபிராமி.

“என்ன இது, இவ்வளவு நேரம் விழித்திருந்தவள் இப்போது உறங்குகிறாளே.. எப்படி நாம் சாவடியை கடப்பது?”

“இருளிலேயே எல்லை தாண்டி விடுவது உத்தமம் வள்ளி”

“உண்மைதான்.. இவளை தூக்கிக் கொண்டு அவ்வளவு தொலைவு என்னால் செல்ல முடியுமா?”.

“இன்னும் சில நாழிகைகள் இந்த காட்டுக்குள் தங்கி விட்டு சூரியோதத்திற்குள் எல்லை கடக்கலாம்”

“இங்கே இந்த வனத்திலா.. எப்படி விஜயாங்கா?”

“ம்..காடுதான் பாதுகாப்பு. கிராமத்துக்குள் இப்போது நுழைந்தால் ஐயம் வர வாய்ப்புகள் அதிகம்”

“அதுவும் சரிதான்.. அந்தப்புரத்தில் பத்தோடு பதினொன்றாக திரும்பிப்போக முடியாது என்னால்”

“நானும் கழுமரக் களத்திற்கு மீண்டும் போக விரும்பவில்லை”

கலகலவென்ற சிரிப்பில் கவலை மறந்து திளைத்தோம்.

“ஆமாம், பத்தோடு பதினொன்றா.. நூறோடு நூற்றியொன்றா?..”

சிரிப்பொலி இன்னும் வலுத்தது.
--------------------------------------------------

அவரவர் பைகளை மேலிருந்து கீழே இறக்கி இருக்கை மேல் வைத்தார்கள். பயணம் முழுக்க உட்கார்ந்திருந்த எல்லாரும் எழுந்து காலை நீட்டி தயாராகினர். இவ்வளவு நேரமும் நின்றிருந்த சிலர் கிடைத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். கடைசி சில நிமிடங்களாவது உட்கார்ந்தால் கால்வலி போய்விடும் போலும்.

வண்டி திருச்சிராப்பள்ளி சந்திப்பில் நின்றது. கூட்டம் நெறித்தது. அந்த இரவிலும் சூடாக இருந்தது காற்று.

அரைத் தூக்கத்தில் இருந்த அபியை இழுத்துக் கொண்டு வள்ளி சிரமப்படுவது தெரிந்தது. நான் மெதுவாக நகர்ந்து அவள் கூடவே சென்றேன்.

“நீங்க போங்க.. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்”

“நிஜமாவா?”, அவள் கண்களை ஊடுருவிக் கண்டிப்புடன் கேட்டேன்.

சில நொடிகள் என் கண்களுக்குள் பார்த்தவள், பின் முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. நான் அசையாமல் நின்று என் பிடிவாதத்தைக் காட்டினேன்.

தலை நிமிர்த்தியவள் கேட்டாள், “உங்க வீட்டில..”

“என் வீட்டில நான் மட்டும்தான் இருக்கேன்.. இப்போ வீடு பூட்டிதான் இருக்கும்”
--------------------------------------------------

நீண்ட பயணம் தந்த களைப்பில் அபி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நானும் வள்ளியும் சூரியோதயம் தாண்டியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இரவு அது.

வள்ளியின் பழுப்பு நிறக் கண்களில் முழு விடுதலை உணர்வு தெரிந்தது எனக்கு.

--------------------------------------------------

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Thursday, June 11, 2009

ஏமாத்திட்டீங்களே அப்பா


விமானப் பயணம்
சில வருஷங்களுக்குப் பின்
மற்றும் ஒருமுறை
சேர்ந்தே பயணித்தோம்
அப்பாவும் நானும்
சீட்டில் சாய்ந்தபடி
சாண்ட்விச் சாப்பிட்டு நான்
சரக்கோடு சரக்காக
சவப்பெட்டிக்குள் அப்பா

வாழ்க்கை
ஒன்றாம் திகதி
உற்சாகமாக
எழுந்து குளித்தார்
பத்தாம் திகதி
காரியம் செய்து
மழித்து முழுகினோம்

Friday, May 15, 2009

மகா மொக்க கவுஜைகள்...


திரும்பி

திரும்பி வருவாய்
விரும்பி தருவாய்

விரும்பி வருவாய்
திரும்பி தருவாய்

திரும்பி திரும்பி
விரும்பி விரும்பி

தருவாய் தருவாய்
வருவாய் வருவாய்

திரும்பி விரும்பி
விரும்பி திரும்பி

தருவாய் வருவாய்
வருவாய் தருவாய்


சொன்னாள்

ஓரெழுத்தில் கவிதை எழுதச் சொன்னாய்
எழுதினேன் “நீ”

ஒரே சொல்லில் எழுதப் பணித்தாய்
எழுதினேன் “கவிதை”

ஒற்றை வாக்கியத்தில் கேட்டாய்
எழுதினேன் “நீயே ஒரு கவிதை”

வாழ்வெலாம் சேர்ந்தே கவிதை புனையலாம்
வாவென்று வேண்டினேன்

சொன்னாள்
ச்சே.. நீயும் சராசரி ஆம்பளைதானா
உன் முகத்தை கண்ணாடியில பாத்ததேயில்லையா
ஐயோ.. நான் உன்னை என் அண்ணன் மாதிரி நினைச்சுப் பழகினேன்
நாம நல்ல ப்ரண்ட்ஸா இருப்போம்
எனக்கு அமெரிக்கா மாப்பிள்ள பாத்திருக்காங்க
முதல்ல உன் காலில் நில்லு அப்புறம் வரட்டும் கத்திரிக்காயும்..
ஒரு பொண்ணு கொஞ்சம் சிரிச்சு பேசிறக்கூடாதே..
உனக்கு வேணும்னா பீலிங் வரலாம்.. எனக்கு காதல் வரலையே
அப்பன் காசுல திங்கற உதவாக்கரை..உனக்கு இதெல்லாம் கேடா..
சாப்ட்வேர் மாப்பிள்ள எனக்காக காத்திருக்காரு
நான் பழகினது சும்மா டைம் பாசுக்கு
எங்க மாமா பையனைத்தான் நான் கட்டிக்கணும்
எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நினச்சி மறந்துடு
- Picture by Hamrita

Tuesday, March 10, 2009

நானும் ஒரு இசை மேதை

நானும் ஒரு இசை மேதை

கொஞ்ச நாளாவே சுட்டெரித்து எரிச்சலை கிளப்பிய சென்னை வெயில் இப்போ இரண்டு நாட்களாக தணிந்து ரம்மியமா இருக்கு. அதனால் போக்குவரத்து சமிக்ஞைகளில் எரிச்சலில்லாமல் ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்து விட முடியுது.

இன்னும் முழுசா ஒரு நிமிடத்துக்கு மேல இருப்பதால், எஞ்சினை அணைத்து விட்டு குதிரையை தட்டி விட்டேன்.. அப்படியே சிந்தனை குதிரையில் பயணிக்கும்போதுதான் அந்த இசையை உணர்ந்தேன்.. (ஆமாம் நிஜமாவே உணர்ந்தேன்). எனக்கு முன்னால நின்ற பியாஜியோ முச்சக்கர சாமான் ஏற்றும் வண்டி ஒன்று புல் லோடில் டம், டம், டம், டடம்டம், டமடம், டம், டம், டம், டடம்டம், டமடம் என்று ஒரு குறிப்பிட்ட தாளத்துடன் சத்தம் எழுப்ப.. அதன் பின்புறம் தாளத்துக்கு ஏற்ப ஆட்டம் போட்டுக் கொண்டு.. ஆஹா.. என்ன ஒரு இசை.. அதுவும் ட்ராபிக் சிக்னலில்.. எனக்கு மொழி படத்தில் ஜோதிகா காய் நறுக்குவதை தலையாட்டி ரசிப்பது கண்ணில் தெரிந்தது.

“ராதாமோகன் ஒரு ஜீனியஸ். அவர் மட்டுமா, நானும்தான். என்ன ஒரு முப்பது வருஷம் லேட்டாகி விட்டது. சின்ன வயசிலேயே என் பெற்றோர் இந்த இசை ஆர்வத்தை கண்டறிந்து எனக்கு ஒரு கீபோர்டோ, கார்ட்போர்டோ, புட்போர்டோ வாங்கி கொடுத்திருந்தால், நானும் இன்னைக்கு ரெண்டு கையிலும் ரெண்டு ஆஸ்கார் வைத்துக் கொண்டு...”, புளங்காகிதம் அடையும் வேளையில்.. “க்க்கீ..கீகீகீ” என்ற சத்தத்துடன் இணைந்து வந்தது, “யோவ், இன்னா தூங்கறியா, சிக்னல் கிடைச்சுடுச்சுல்ல, வண்டிய எடுய்யா.. வந்திட்டாய்ங்க”

இசை மேதை மறுபடியும்

அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் பேசும்போது, வழக்கமாக கேட்கும் மொக்கை கேள்வியை கேட்டு வைத்தேன்.

“இதுதான் இந்தியாவுக்கு முதல் முறையா?”

“ஆமாம்”

“இந்தியா பிடிக்கிறதா? எப்படி உணர்கிறீர்கள்”

தொடங்கியது பதில்..

“ம்.. இந்த கலாச்சாரம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நேற்று நான் கடைவீதிக்கு செல்லும்போது ஒரு புடவை வாங்கி வந்தேன்.. அதை அணிய ஆசைதான், ஆனால் எப்படி என்று தெரியாதே.. (என் குழு பெண்களை பார்த்து) உங்களில் யாராவது ஒருவர் உதவலாம், மேலும் நேற்று ஒரு உணவகத்தில் இந்திய உணவு உண்டேன். மிகவும் வித்தியாசமக இருந்தது. உணவை விட அங்கு வாசித்த இசை பிடித்தது. ஒருவர் புல்லாங்குழல் வாசித்தார், இன்னொருவர் சிறு “ட்ரம்” போன்ற ஒரு வாத்தியம்..ம்ம் அதுதான் தபலாவோ.. அது வாசித்தார். மூன்றாமவர் வாசித்த வாத்தியம் மிக வித்தியாசமாக.. ஒரு மண்பானை போல...”

என்னுள் இருந்த இசைமேதை சட்டென்று விழித்துக் கொண்டு.. எல்லரையும் முந்திக் கொண்டு “அது கடம்.. அதன் பெயர் கடம்”..

“ஓ..கட்டம்.. நல்ல ஓசை அது. நான் சிறியவளாக இருக்கும்போது என் அப்பா கேட்கும் இசை போல.. என் அப்பா பண்டிட் ரவிஷங்கர்ஜி.. இன்னும் லாகுடி ஜெயர்மான்.. போன்றவர்களின் இசைத்தட்டுக்கள் வைத்திருந்தார்.. எனக்கு அது பிடிக்ககும்... உங்களுக்கு”

மனதுக்குள், “ஆஹா, நமக்கு ரவிசங்கரும் தெரியாது, ஜெயராமனும் கேட்டதில்லை, பேசாமல் ஜகா வாங்கிறலாம்”..

“ம்.. உங்களுக்கு இந்தியா பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி, சரி நாம் நமது வேலையைப் பற்றி பேசலாமா?”