Friday, July 10, 2009

அறிவுகெட்......

'தட்'

'தட்' என்று வந்து விழுந்தது அந்த கல் கதவு மேல். ரத்த ஓட்டம் முழுவதும் தலைக்கேறி கோபம் வந்தது. வழக்கம் போல எழுந்து சென்று கதவைத் திறந்து "அறிவுகெட்.." இல்லை, அடுத்த கல்லுக்காக காத்திருக்கலாம் என மனது எண்ணியது. சிறிது நேர அமைதி... அதற்குப்பின் மீண்டும் ஒரு கல் 'தட்' என மோதி கதவை உடைத்துக்கொண்டு என் கண்களை நோக்கி... சட்டென்று தூக்கம் கலைந்தது. அரைத் தூக்கத்தில் என்ன நடந்தது என்று ஒரே புதிராக இருந்தது.

சோம்பலும் கையாலாகாத்தனமும் கோபத்துடன் கூட்டு சேர தூக்கம் முற்றிலுமாகக் கலைந்தது. அர்த்த ராத்திரியில் தூக்கம் கலைவதில் உள்ள வெறுப்பு வேறெதிலும் இல்லை. திடீரென நாய்களின் ஓலம் எழுந்து மறைந்து பின், மரண அமைதியாக இருந்தது. இருட்டு பயமுறுத்தியது. என்ன ஒரு கனவு, அப்படியே நிஜம் போல. உண்மையாக மனத்தின் ஓரத்தில் படிந்த பயங்கள், இயலாமைகள்தான் கனவாக உருவெடுக்கும் என எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது. மீண்டும் 'தட்' என்ற அந்த ஓசையை மனது எதிர்பார்த்தது.

இரவின் வெட்கையில் நாவறண்டு தண்ணீருக்காக ஏங்க, எழுந்து மண்பானையை நோக்கி நடந்தபோது அந்த ஓசை கேட்டது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன். ஓசையில் வேறுபாடு இருப்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது. மீண்டும் கதவை யாரோ தட்டும் ஓசை. கதவைத் திறக்க, வேர்த்து, விறுவிறுத்து நின்றது இருட்டில் ஒரு உருவம்.

"ஐயா வாசல் லைட்டை கொஞ்சம் போடுங்கய்யா, பாழாப்போன நாய்த்தொல்லை தாங்க முடியல", குரல் முனகலாக வந்தது.

"என்ன ஆச்சுப்பா? இந்த நேரத்தில?" கேள்விகளை அடுக்கியவாறே வாசல் விளக்கை எரிய விட, பகீரென்றது அவனது கெண்டைக்காலை மடித்துக் கட்டியிருந்த லுங்கியின் கீழ் பார்த்த கணம்.

"காட்டில தண்ணி காட்டிட்டு... மோட்டாரை நிறுத்திட்டு இப்பதான்யா வாரேன், வர்ர வழியில அந்த கறுப்பு கிடா நாய் காலில பாய்ஞ்சு...", மேலே பேச முடியாமல் திணறியவனை ஆசுவாசப்படுத்தியபோதுதான் கவனித்தேன், அந்த பக்கமாக வலம் வந்து கொண்டிருந்த நாலைந்து நாய்களை.

அவசரமாக சைக்கிளை வெளியே எடுத்து, கதவை பூட்டினேன். சைக்கிள் பின்புறம் அவனை அமர்த்தி மருத்துவர் வீடு நோக்கி மிதித்தேன்.

-------------------------------------

வீடு திரும்பும்போது சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால், தள்ளிக் கொண்டே நடந்தேன்.

நடக்கும்போது மனம் முழுவதும் அந்த இளைஞர்களை வசை பாடிக்கொண்டே வந்தேன். தினமும் நடு இரவு வரை அரட்டை அரங்கம் நடத்தி விட்டு சந்து வழியே செல்லும் பயல்களின் வேலைதான் இது. என்னதான் உடம்பு வளர்ந்தாலும் அறிவு வளராதவர்கள். அது பாட்டுக்கு சாதுவாக செல்லும் நாயை கல்லால் அடித்து வம்புக்கு இழுப்பானேன். அப்படி என்னதான் நடு இரவு வரை பேச்சோ. நாய்கள் அவற்றின் கோபத்தை ஒன்றுமறியாதவர்களை பதம் பார்த்து தீர்த்துக் கொள்கின்றன. கையில் கல் இல்லாதவன் ஒன்றும் அறியாதவந்தானே. அப்படி அந்த நாய்களை பழக்கி விட்டார்களே....

அதை விட, நாயடிக்கும் சாக்கில் வீட்டு கதவின் மீது கல்லெறிவதுதான் இவர்களது பொழுதுபோக்கு. ஒரு நாள், இரு நாள் என்றால் பரவாயில்லை. பல நாட்கள், பல கற்கள் என் கதவு மீது. தூக்கம் கலைந்து எழுந்து, கதவைத் திறந்து "அறிவுகெட்..." என கத்தும் முன்னரே தபதப என தலைகால் தெறிக்க ஓட்டம். அப்படி என்ன இதில் வேடிக்கையோ?

இருட்டின் நிசப்தத்தில் "அறிவுகெட்..." என உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. சட்டென நின்றேன். பின்னாலெ சிறு சத்தம் கேட்டது. என் பின்னே ஒரு நாய் பதுங்குவது தெரிந்தது. மெதுவாக திரும்பி பார்த்தேன். ஒன்றல்ல மூன்று நாய்கள். தெருவோர விளக்கு வெளிச்சத்தில் அவற்றின் கண்கள் மின்னின. குலை நடுக்கம் எடுத்தது. ஓட்டம் பிடிக்கலாமா? இல்லை இல்லை. இரண்டடி பின்வாங்கி சராரென்று குனிந்து ஒரே வாறலில் கையில் இரண்டு கற்கள்.

கையை ஓங்க நாய்கள் எடுத்தன ஓட்டம். ஓங்கின கையை இறக்காமல் ஒரு நாயை நோக்கி கல்லை எறிந்தேன். சில நொடிகள் காற்றில் பயணித்த கல் தரையில் பட்டு எம்பி நேரே சென்று.. 'தட்' . ஆம், என் வீட்டு கதவுதான்.

நல்ல வேளை நான் உள்ளே இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் கதவைத் திறந்து என்னை நானே, "அறிவுகெட்....".

4 comments:

K.Balu said...

அறிவுகெட்... அட சொல்லி முடிங்களேன்.. அடுத்த சொல்லுக்காகதான் எல்லாரும் waiting...

K.Balu

இம்சை said...

I read this story 3 days back itself but sorry I didn't give my comments.

PPattian : புபட்டியன் said...

வாங்க K.பாலு.. சொல்லுவதை விட சொல்லாமெலே விடுவது சக்தி வாய்ந்தது சில நேரங்களில்.. :)

வாங்க இம்சை.. அதனாலென்ன. ஒருவேளை என் கதை கமென்ட் போடும் அளவுக்கு நல்லாவே இல்லையோ? :))

நாடோடி இலக்கியன் said...

வாவ் வேறென்ன சொல்ல....