Monday, December 28, 2009

மா........ மல்லபுரம்

பார்த்திபன் கனவாகவும், சிவகாமியின் சபதமாகவும் மட்டுமே கொஞ்சமாகத் தெரிந்திருந்த மாமல்லபுரத்தை நேரில் கண்டது என் வாழ்வின் மறக்க முடியா நிகழ்வென்பதை மறுக்க முடியாது. பொதுவாக இது போன்ற சுற்றுலாக்களில் இணைந்தே இருக்கும் புழுதியும், வெயிலும், கூட்டமும், அசௌகரியங்களும் "எப்போடா வீடு வந்து சேருவோம்" என்று அயர்ச்சியைத் தந்து அந்த தளங்கள் தரும் அனுபவங்களை மழுங்கடித்து விடும். ஆனாலும் அவற்றையும் மீறி (இதுவரை நான் சென்றிருக்கும் வெகு சில வரலாற்று, கலைத்தலங்களில்) அந்த இடத்தை விட்டு பிரிய மனமில்லாமல் செய்து, பிரிந்தும் மனத்தில் இனிக்கும் தளங்கள் இரண்டேதான்.. ஒன்று தாஜ்மகால்.. இன்னொன்று?.. அதான் இது..


மாமல்லபுரத்து கடற்கரைக் கோவில். அது ஒரு அற்புதம். இத்தனைக்கும் நாங்கள் அந்த ஊரில் உள்ள அர்ஜூனன் தவம், ராமனுஜர் மண்டபம், மகிசாசுரமர்த்தினி குகை, ராயர் கோபுரம், கிருஷ்ணாவின் வெண்ணெய்ப் பந்து உட்பட்ட பலவற்றை பார்த்துக் களைத்த பின்னரே கடற்கரைக் கோயிலுக்குச் சென்றோம்.. ஆனாலும் பார்த்த மாத்திரத்தில் உள்ளம் கொள்ளை போனதே.. WOW..


வரலாற்றை விடுங்கள்.. மாமல்லனும் சிவகாமியும் (?!!) நடமாடியிருக்கலாம் என்னும் எண்ணத்தை மறங்கள்.. அந்த படைப்பின் தற்போதைய அழகே போதும்.. அங்கேயே கேம்ப் அடிக்க..

அதே தாஜ்மகாலுக்கும், ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும் (மலை மலை அல்ல) பொருந்தும். தாஜ் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது (ஆங்கிலத்தில்).

அப்புறம் சில மாமல்லபுரத்துக் குறிப்புகள் (நாங்கள்ளாம் நெனச்சா வண்டி எடுத்துட்டு மகாபலிபுரம் போய்டுவோமாக்கும்னு சொல்பவர்களுக்கு இல்லை இது!!!).

* மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டியவை நான்கு இடங்களில் உள்ளன

1. அர்ஜூனன் தவம், கலங்கரை விளக்கம் (புதிது, பழையது), பட்டர் பால், ராயர் கோபுரம் உட்பட்ட பல புதுமைகள், ஒரு பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் ஒரு நான்கு சதுர கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதிக்குள் வண்டிகள் நுழைய முடியாது.. மலைப் பிரதேசத்து கால்நடைதான். சில இடங்கள் தப்பிப் போகவும் வாய்ப்புள்ளது. இந்த இடத்திற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.




2. பஞ்ச ரதங்கள் உள்ள ஒரு மணல் நிறைந்த சமதளம். இது முதலில் சொன்ன பிரதேசத்திலிருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு பத்து ரூபாய் கட்டணம் (பெரியவர்களுக்கு மட்டும்). இந்த நுழைவுச் சீட்டையே கடற்கரைக் கோவிலிலும் பயன்படுத்தலாம்.




3. கடற்கரைக்கோவில் மற்ற இரண்டு இடங்களில் இருந்தும் ஏறத்தாழ சமமான தூரத்தில் (இரண்டு கிலோ மீட்டர்?) உள்ளது. இது மிக்க அழகாக பராமரிக்கப்பட்ட புல் தரைகளுடன் கூடிய இடம்.


4. புலிக் குகை உள்ளது மாமல்லபுரத்து நகரத்துக்கு வெளியே.. இது நகரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு. போகும்போதே இதை பார்த்து விட்டு போவது உசிதம். இல்லாவிட்டால் களைப்பு, தளர்வும் கூடி இதை விட்டு விட வாய்ப்புள்ளது ( அனுபவம் :( )

* நகரத்து சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால், உள்ளே செல்வதும், வெளியே வருவதும் நேரத்தைத் தின்று விடுகிறது. அதனால் ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு நடராஜா சர்வீஸே நல்லதோ எனத் தோன்றுகிறது.

* கடற்கரைக் கோவிலிலும், பஞ்சரதத்திலும் வண்டிகளுக்கு (பார்க்கிங்) ரூ 20 வசூலிக்கப்படுகிறது.

* அடையாறு ஆனந்த பவனில் கூட்டம் அள்ளுகிறது (நாங்கள் போனது சனிக்கிழமை). சாப்பாட்டுக்காக வரிசையில் நின்று வெறுக்கடிக்கிறது. இன்னும் கொஞ்சம் வாடிக்கையாளர் நலம் பேணலாம்.

விதவிதமாக புகைப்படங்கள் சுட்டுக் கொண்டு வீடு திரும்பும்போது நிறைவு.. அதுவே தேவை இது போன்ற சுற்றுலாக்களில். இதுதான் என் நிழற்படம்..


சென்னைக்குத் திரும்பும் வழியில் "தக்ஷின் சித்ரா" என்னும் இடத்தில் இரண்டு மணி நேரங்கள் செலவழித்தோம். அது குறித்து அடுத்த இடுகையில்.

Monday, December 21, 2009

உலகப்படங்கள் மூன்று

வாய் இருந்தா அழுதிடும் என் வீட்டு TV. பின்ன.. சாயங்காலம் ஆறரை மணியிலருந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி வரை நான்ஸ்டாப்பா படம் பார்த்தா.. அதுவும் ஒரே சேனலில்...

மூன்று அருமையான உலகப்படங்கள் பார்க்கக் கிடைத்தது..
----------------------------------

முதலில் “Eye in the Sky” என்று ஒரு கேன்ட்டோனிஸ் (Cantonese, 2007) படம். முழுதும் ஹாங்காங்கின் SU எனப்படும் Survellence Unit செய்யும் துப்பறியும் செயல்கள் குறித்த படம். படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் ஹாங்காங்கின் தெருக்களில் சில ஆசாமிகளை மாற்றி மாற்றி காண்பிக்கையில், அது ஹீரோவா, வில்லனா இல்லை குஷி படத்தின் SJசூர்யா போல கதைக்கு சம்பந்தமில்லாத ஆட்களா என தெரியாத ஒரு த்ரில் இருக்கிறது. அதற்குப்பின் ஒரு நகைக் கடைக் கொள்ளையில் ஆரம்பிக்கும் கதை, கடைசி வரை சுவாரசியம் குன்றாமல் படு ஸ்பீடாகப் போகிறது.

பல இடங்களில் அவர்கள் உளவு பார்க்கும் விதம் திகைக்க வைக்கிறது. கற்பனை பண்ணிப் பாருங்கள், நீங்கள் தெருவில் நடக்கும்போது உங்கள் முன் கல்லூரி மாணவி போல நடந்து வரும் பெண் உங்களை வேவு பார்ப்பவராக ஒருக்கலாம். அது மட்டும் இல்லை, அவர் அந்த தெருவின் அடுத்த பக்கத்தில் நடந்து செல்லும் ஒரு வயதானவரோடு உங்களைப் பற்றிய தகவல் பரிமாறிக் கொண்டிருக்கலாம். சந்தேகம் என்று வந்தபின் உங்கள் வீட்டு குப்பை (Garbage) கூடக் கிளறப்படலாம்.

Training Day என்ற படத்தில் வருவதைப் போலவே இதிலும் தன் முதல் நாள் வேலை தரும் திருப்பங்களை தன் அதிகாரியுடன் சந்திக்கும் கதை என்றாலும் இது வேறு தளத்தில் தனித்து தெரிகிறது. கொஞ்சமாக நம்ம "அஞ்சாதே"வையும் ஆங்காங்கே ஞாபகப்படுத்துகிறது.
----------------------------------

இரண்டாவதாக “Three Colours White” என்ற போலந்து (Polish, 1994) படம். பாரிஸில் ஒரு நீதிமன்றத்தில் ஆரம்பிக்கிறது படம். தன் பிரெஞ்சு மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டு, கைவிடப்பட்டு, அனாதையாய், மொழி புரியாத ஊரில், இரவில், ஒரே பெட்டியான உடைமையோடு, குளிரில் (ஆங்.. நள தமயந்தி சாயல்.. அதே) தவிக்கிறான் நாயகன். பின் எப்படி தன் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போகிறான், எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறான், எப்படி தன் (முன்னாள்) மனைவியை திரும்பப் பெறுகிறான் என்பதுதான் படம்.

ஷூவையும், பெல்ட்டையும் கூட கழற்றி சோதித்தே விமானத்துக்குள் அனுப்பும் இந்தக் காலத்தில் இருந்து பார்க்கும்போது, வார்சாவுக்கு நாயகன் திரும்பிப் போகும் ஐடியா சிரிப்பை வரவழைத்தாலும், 1994ல் அது நிதர்சனமாக இருந்திருக்கலாம். கதையில் வரும் கொஞ்ச நஞ்ச தொய்வுகளையும் தன் குழந்தைத் தனமான முகத்தாலேயே சரிக்கட்டியிருக்கும் நாயகன் படம் முடிந்தும் நெஞ்சில் நிற்கிறார். அதேபோல அந்த வயலின்களும், புல்லாங்குழலும் இழையோடும் பிண்ணனி இசையும்.
----------------------------------

மூன்றாவதாக நான் பார்க்கக் கிடைத்த்து ஒரு ஸ்பீல்பெர்க் படம். ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் என்று இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளில் நெஞ்சைத் தைக்க வைத்து, தேடித் தேடி உலகப்போர் குறித்து படிக்க வைத்த அதே ஜீனியஸின் உலகப்போர் தொடர்பான இன்னொரு படைப்பு. இது schindler's list க்கு ஆறு வருடங்கள் முன்னால் (1987) வந்த "Empire of the Sun".

1937 - 1945 ல் சீனாவை ஜப்பான் ஆக்கிரமித்து கொன்று குவித்தபோது, அங்கு வாழ்ந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாட்டவர்களின் வாழ்க்கையை, போரின் கலேபரத்தில் தன் பெற்றோரை பிரிந்து அல்லாடும் ஒரு சிறுவன் வாயிலாக சொல்கிறார் இயக்குநர்.

கலவரம், சிறுவன், பெற்றோரைப் பிரிதல், சிறுவன் தெருவில் அலைதல், வெறிச்சோடும் தன் வீட்டுக்கு தனியே திரும்பி வருதல் என கொஞ்சமாய் “பம்பாய்” (Bombay) வாடை!!!

தன் பெற்றோரை விட்டு பிரிந்தபின், போகும் இடமெல்லாம் ஜப்பானியர்களிடம் "I Surrender" சொல்வதும், தான் இருக்கும் கேம்ப்பில் ஒவ்வொருவருக்கும் ஓடியாடி உதவுவதும், ஜப்பானிய கேப்டன் மருத்துவரை அடிக்கும்போது மன்றாடுவதும், இறந்த பெண்ணின் நெஞ்சை அழுத்தி அவள் கண்கள் அசையும்போது (pumped blood into brain momentarily?) குதூகலிப்பதும், தன் ஜப்பானிய நண்பன் கொல்லப்பட்டவுடன் ஆத்திரப்படுவதும், காவலர்களுக்கு தெரியாமல் கேம்ப்பின் முள்வேலிக் கம்பிக்கு வெளியே சென்று வந்து அமெரிக்க ஆடவர் கூடரத்தில் கம்ப்பீரமாக நிழைவதும், கடைசியில் எந்த சலனமும் இல்லாமல் தன் தாயின் தோளில் சாய்வதும் என அந்த சிறுவனுக்கு இது முதல் படமென்பதை நம்ப மறுக்கிறது மனம்.

விமானங்கள் மீது காதலுடன் அலையும் சிறுவன் (ஐந்து வயது முதல் கார் மீது அமோக காதல் கொண்டு, வளர்ந்து பெரியவனாகியும் விளையாட்டு -Toy கார் சேகரிப்பில் இருக்கும் என் தம்பி கோபி நினைவு வந்து போனது) பின்னாளில் ஒரு போர்க்கைதியாக அடைபட்டிருக்கும் சிறையின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழியும்போது அதற்காக துள்ளிக் குதித்து ஆனந்தப்படும்போது பரிதாபம் மிஞ்சுகிறது. அதன் பின்னே "எனக்கு என் பெற்றோரின் முகம் மறந்து விட்டது" என அழும்போது நம் மனமும் கரைகிறது.
----------------------------------

மொத்தத்தில் "எவ்ளோ நேரம் அந்த TV ஓடுது”.... “ஆஃப் பன்ண்ணிட்டு வந்து படுங்க”.. “அப்படி என்னா அதுல ஓடுது”.. “இந்த படத்த எப்படியும் இன்னும் பத்து முறையாவது போடுவான்”.. “நாளைக்குப் பாத்துக்கலாம் வாங்க”... “இப்டி பாத்தா கண்ணு கெட்டுப்போவாது”... “அப்டி தூங்காமக் கூட என்ன படம் வேண்டிக் கிடக்கு”.. “ச்சே இப்டியும் கூட இருப்பாங்களா”.. “எக்கேடோ கெட்டு போங்க” போன்ற ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் விட்ட வசனங்கள் போக அது ஒரு முத்தான பொழுதாகக் கழிந்தது.

கடைசியா, இது மூணும் எப்படி உலகப் படம் ஆகும்னு கேட்போருக்கு!!!... இந்த படங்களை ஒளிபரப்பியதே UTV World Movies தான்.. சன் டைரக்ட் இருப்பின் இது 414 என்ற சேனலில் தெரியும்.

Tuesday, December 8, 2009

தலைவன் துயிலும் இடம்.. கொஞ்சம் படம்

புள்ளியில் முடியும்.. சாலை

எருக்கு, வண்டு கொள்ளும் செருக்கு

தனித்து கோபுரமாய்

சித்திரைத் தேர்.. கம்பீரம் பார்

தலைவன் துயிலும் இடம்





Tuesday, December 1, 2009

நெல்சன் மாணிக்கம் - உரையாடல் போட்டிக்காக

நெல்சன் மாணிக்கம்

காமத்தின் சாலையில் வானவில்
ரசபாசங்களில் ராமன் வில்
வளைப்பவர் வலையில் விளையும்
சளைப்பவருக்கு களையும்

நெல்சன் மாணிக்கத்தின் காட்சிப்பொருள்
விளையும் பயிரின் லகரம் காண
நேர்த்தியற்று மனம்பிறழ்ந்து
ரஹஸ்ய தொலைவில்

அறுபது பத்து.. வருமா
இல்லை.. முப்பது நூறு
சரி.. எண்பது பத்து
அரை மூன்று ஆயிரமாவது..

சுள்ளென தலைக்கேறி பரம்பரை பலியாக
தள்ளென தள்ளி வசவு வெளிவர
கல்லும் மண்ணும் காற்றில் பறக்க
பல்லாவது தப்பிட விர்ரென முறுக்கு
--------------------------

கடைசியில் "அது என்ன?" அப்டீன்னு முடிச்சிருக்கணுமோ :)

--------------------------

கொஞ்சம் கொசுறு கவுஜைகள்

பூக்கோலம்

சாலை எங்கும்
சிரித்தது பூக்கோலம்
சற்றுமுன் நடந்த
சாவு ஊர்வலம்

எத்தனை எத்தனை

அறுபதில் வந்தேன்
விழுந்தது சிவப்பு

எத்தனை எத்தனை
போக்குவரத்து சமிக்ஞைகளில்
விரயமாகும் மனித நேரங்கள்

என்னவெல்லாம் செய்யலாம்
அத்தனையும் சேகரித்து

கோலங்களில் தேவயானியோ
நீயா நானாவில் வெட்டிப்பேச்சோ
அல்லது
பத்தாயிரமாவது முறையாக
கண்டேன் காதலை விளம்பரம்

படம் உபயம்: ஹம்ரிட்டாவின் மௌஸ்வண்ணம்